ஸ்பாய்லர் விஜய்.. கணக்குகளை பொய்யாக்கும் தவெக? தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? கணிப்புகள் சொல்வதென்ன?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அரசியல் சூழலை மேலும் பரபரக்க வைத்துள்ளன. பெரும்பாலான கணிப்புகள் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என கூறினாலும், அந்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லாமல் கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் தான் அமையக் கூடும் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் வலுவாக பேசப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய சூழலில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகள் தான் உள்ளதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 இடங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு 120 முதல் 140 இடங்கள் வரை கிடைக்கலாம் என சராசரியாக சுட்டிக்காட்டுகின்றன.
சில கணிப்புகள் 125-145 இடங்கள் என கூறினாலும், சில நிறுவனங்கள் 90-110 இடங்களுக்குள் திமுக கூட்டணி முடிவடையலாம் என மதிப்பிட்டுள்ளன. இதனால், திமுக தனித்து பெரும்பான்மை பெறுமா அல்லது கூட்டணி ஆதரவு தேவைப்படுமா என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

2026 சட்டசபை தேர்தல்
இந்த தேர்தலில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி தான். முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கிய இந்த கட்சி, பல்வேறு தொகுதிகளில் வாக்குகளை கணிசமாக பிரித்துள்ளது. இதன் தாக்கம் திமுகக்கும் அதிமுகக்கும் இரு திசைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
ஒருபுறம் திமுக எதிர்ப்பு மனநிலையை பயன்படுத்தி சில வாக்குகளை தவெக தன் பக்கம் இழுத்துள்ளது. மறுபுறம் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி பகுதிகளிலும் சிதறலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எந்தக் கட்சிக்கும் எளிதில் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியிருக்கலாம் என்ற கணிப்பும் முன்வைக்கப்படுகிறது.
திமுக கூட்டணி
இந்த நிலை தொடர்ந்தால், திமுக கூட்டணி அதிக இடங்கள் பெற்றாலும், அது கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பிய அரசாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதுவே "கூட்டணி ஆட்சி" என்ற விவாதத்தை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. அரசியல் கணக்கில் பார்த்தால், சிறிய கட்சிகளின் பங்கு முக்கியமாக மாறும் சூழல் உருவாகலாம். அதே நேரத்தில், சில கருத்துக் கணிப்புகள் முற்றிலும் மாறுபட்ட படங்களையும் காட்டியுள்ளன.
அதிமுக கூட்டணி
சில நிறுவனங்கள் அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சில கணிப்புகள் தொங்கு சட்டமன்றம் கூட அமையலாம் எனவும் கூறுகின்றன. இதனால் இந்த முறை தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணிப்பது கடினமாகி விட்டது. கருத்துக் கணிப்புகள் எப்போதும் முழுமையான உண்மை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. அவை மாதிரித் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், உண்மையான முடிவுகள் மாறுபட வாய்ப்பு உண்டு.
தனிப்பெரும்பான்மை
இதை கருத்தில் கொண்டு பல நிறுவனங்களே "இவை கணிப்புகள் மட்டுமே" என்று எச்சரிக்கை குறிப்புடன் வெளியிட்டுள்ளன. மொத்தத்தில் பார்க்கும்போது, இந்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், அது தனிப்பெரும்பான்மையா அல்லது கூட்டணி ஆதரவா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. அதற்கான தெளிவான பதில் மே 4-ஆம் தேதி வெளியாகும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில்தான் தெரியவரும்.














Click it and Unblock the Notifications