தமிழகத்தின் "மொத்த" கவனமும் இந்த "ஒத்த" டிவீட்டில்.. இப்ப விஜய் களமிறங்கினா எப்படி இருக்கும்!
விஜய் இந்த நேரத்தில் அரசியலில் களம் குதிப்பாரா? என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்
சென்னை: ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டார்.. ஆனால் ரஜினி அரசியல் அறிவிப்பை விட விஜய்யின் நெய்வேலி செல்பி போட்டாதான் மிகப் பெரிய வைரலாகியுள்ளது. இந்த சமயத்தில் விஜய் களமிறங்கினால் அரசியலில் அவர் அதிரடி காட்டுவார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மூடில் உள்ளனர்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் ஒரு வழியாக அரங்கேறப் போகிறது. டிசம்பர் 31ம் தேதி எல்லாவற்றையும் அறிவிப்பதாக கூறியுள்ளார் ரஜினிகாந்த். உடம்பு சரியில்லை என்று காரணம் சொல்லி கொண்டிருந்த ரஜினி, திடீரென கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளதன் பின்னணியில் நிர்ப்பந்தம் உள்ளதாக விசிக தலைவர் திருமாவும் கேள்வி எழுப்பி இருந்திருந்தார்.
எது உண்மை என்று ரஜினியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால் யாராலும் எந்த முடிவுக்கும், கருத்துக்கும் வர முடியவில்லை. ஆனால் நிச்சயம் ரஜினியின் பின்னணியில் பாஜக இருக்கலாம் என்றே பலரும் சந்தேகப்படுகின்றனர்.
ரஜினி
அதற்கேற்றார்போல், அவர் ஆரம்பிக்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவிலிருந்து வந்த அர்ஜுன மூர்த்தியை நியமிக்கவும், அந்த சந்தேகம் ஊர்ஜிதமாகியும் வருகிறது.. மற்றொரு பக்கம், இவ்வளவு காலம் அரசியல் வருகைக்காக எத்தனையோ மன்ற நிர்வாகிகள் காத்திருந்த நிலையில், இப்படி திடுதிப்பென்று ரஜினி, பாஜகவை சேர்ந்த ஒரு நபருக்கு பொறுப்பு தந்துள்ளதும் அதிர்ச்சியை தந்து வருவதாக சொல்லப்படுகிறது.
நெய்வேலி
இந்த நிலையில்தான் விஜய் திடீரென லைம்லைட்டுக்கு வந்தார். அவர் தனது ரசிகர்களுடன் நெய்வேலியில் எடுத்த செல்பியானது, 2020ம் ஆண்டில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்ட டிவீட் என்று டிவிட்டர் இந்தியா அறிவிக்கவே அது வைரலாகி விட்டது. உண்மையில் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக வந்த செய்தியை விட இந்த விஜய் செல்பி செய்தி அதிக அளவில் வைரலானது.
பரபரப்பு
இதை வைத்து ரஜினிக்குப் போட்டியாக விஜய்யும் அரசியல் களத்தில் குதிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் மூழ்கி விட்டனர். கூடவே பாஜக விஜய் பக்கம் திரும்புமா என்ற பரபரப்பையும் சிலர் கிளப்பி விடுகின்றனர். இந்த சமயத்தில் விஜய்யும் அரசியலில் குதித்தால் மிகப் பெரிய அளவில் பரபரப்பாக அது மாறும் என்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மூடுக்கு மாறியுள்ளனர்.
அஸ்திரம்
ரஜினியை வைத்து திமுகவை டேமேஜ் செய்வதுதான் பாஜகவின் முக்கிய பிளானாக உள்ளது.. அதாவது திமுகவின் ஓட்டுக்களை பிரிக்க ரஜினி ஒரு முக்கியமான அஸ்திரமாக இருப்பார் என்பதே அமித்ஷாவின் ஆகப்பெரும் பலமாக ஆரம்பத்தில் இருந்தே உள்ளது.. வெற்றிடம் உள்ளது என்று ரஜினி ஒரு பேச்சுக்கு சொல்லவும், அதையே திருப்பி போட்டு ரஜினியை தன் பக்கம் இழுக்க தொடங்கியது பாஜக.
தாக்கம்
இப்போதைக்கு ரஜினி கட்சி ஆரம்பிக்க ஓகே சொன்னாலும், அவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முன்வருவாரா? அப்படியே வந்தாலும் எல்லா தரப்பு மக்களின் ஓட்டுக்களும் ரஜினிக்கு கிடைக்குமா? என்பதில்தான் குழப்பம் நீடிக்கிறதாம்.. சில தினங்களுக்கு முன்பு, ரஜினியின் தற்போதைய கிரேஸ் பற்றி அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் ஒன்று போனதாம்.. அதில், 1996-ல் ரஜினிக்கு இருந்த கிரேஸ், இப்போதுள்ள கிரேஸ், அரசியல் களத்தில் ரஜினி ஏற்படுத்திய தாக்கம் குறித்தெல்லாம் தெரிவிக்கப்பட்டதாம்.
ரசிகர்கள்
அதனடிப்படையில், ரஜினிக்கு மக்கள் ஆதரவு எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று, அரசியல் கட்சிகளும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றும், அரசியலுக்கு வர சொல்லி அழைத்து கொண்டிருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமே என்றும் சொல்லப்பட்டதாம்.. அதுவும் ஏராளமான ரசிகர்கள் இல்லை.. ஓரளவுக்குதான் போயஸ் கார்டன் முன்புகூடி முழக்கமிட்டு வந்ததையும் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
பிரச்சாரம்
இப்போது யோசனை என்னவென்றால், ரஜினி ரசிகர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதை கடந்தவர்கள்... அதனால் பிரச்சாரம் செய்தாலும், அது எடுபடுமா? என்பதும் சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் ரஜினியால் செய்ய முடியாததை விஜய் களத்திற்கு வந்தால் நிச்சயம் செய்ய முடியும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். சினிமாவை பொறுத்தவரை, ரஜினி படங்களை விட விஜய் படங்களுக்கே மவுசும், வசூலும் அதிகமாக உள்ளது.. மக்களிடம் பிரபலமான நபராக விஜய் திகழ்கிறார்... இதுவரை எந்த சர்ச்சைகள், வம்பிலும் சிக்காமல் உள்ளார்... இதெல்லாம் தங்களுக்கு சாதகமானதாக விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
சவால்
6லிருந்து 60 வரை முன்பு ரஜினிக்கு ரசிகர்கள் இருந்தனர். இப்போது அதே அளவிலான மாஸுடன் விஜய்யும் திகழ்கிறார். ரஜினிக்கு சரியான போட்டியாக விஜய்யை மட்டுமே கருத முடியும். எனவே அவர் இப்போது அரசியலுக்கு வந்தால் மிகப் பெரிய சவாலாக மற்றவர்களுக்கு விளங்குவார் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், விஜய் ஆரம்பத்தில் இருந்தே உஷாராக இருந்து வருகிறார்.. குறிப்பாக, தன் வீட்டில் ரெய்டு நடந்தபோதும் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சி, அதிருப்தி மத்திய அரசு மீது காட்டவே இல்லை.. தவறாக ஒரு வார்த்தையும் விமர்சிக்கவில்லை.
ஆவேசம்
எதிர்க்கட்சிகள் கூட விஜய்க்காக வரிந்து கட்டிக்கொண்டு ஆவேசத்துடன் கண்டனம் தெரிவித்ததே தவிர, விஜய் வாயே திறக்காமல் அமைதி காத்தார்... மாறாக ஒரே ஒரு செல்பியை எடுத்து ட்விட்டரில் போட்டு, தெறிக்க விட்டார்.. அந்த செல்பிதான் தற்போது மாஸாக வைரலாகியுள்ளது. தான் அரசியலுக்கு ஒரு நாள் நிச்சயம் வருவேன் என்று விஜய் ஏற்கனவே சொல்லியுள்ளார். அந்த சூழல் இப்போதே வருமா அல்லது இப்போதைக்கு மெளனம் காப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.