"லியோ.." சிறப்பு காட்சிக்கு அனுமதி.. ஆனாலும் திரையிட மறுக்கும் தியேட்டர்கள்! ரசிகர்கள் போராட்டம்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "லியோ". லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விஜய்- லோகேஷ் மாஸ்டர் படத்திற்குப் பிறகு இணைந்துள்ள நிலையில், மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் தென்னிந்தியத் திரைப்பட உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் "விக்ரம்" என்ற மெகா ஹிட்டிற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.
சர்ச்சைகள்: லியோ திரைப்படத்தின் டிரைலர் இம்மாத தொடக்கத்தில் வெளியானது. இதற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் வரவேற்பே கிடைத்தது. டிரைலர் வெளியாகி சில மணி நேரத்தில் அதிகபட்ச பார்வைகளுடன் இது புது சாதனையைப் படைத்தது. இந்தப் படம் நாளை மறுநாள் அதாவது 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. உலகெங்கும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகும் இந்தப் படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
அதேபோல படத்தின் சர்ச்சைகளும் கூடவே ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம். லியோ டிரைலருக்கு பாசிட்டிவ் வரவேற்பு கிடைத்த அதே நேரத்தில் அதில் விஜய் பேசிய ஒரு கெட்ட வார்த்தை மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. விஜய் இப்படி பெண்களை அவமதிக்கும் வசனத்தைப் பேசலாமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதேபோல இசை வெளியீட்டு விழாவும் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

சிறப்புக் காட்சி: இது ஒரு பக்கம் இருக்கச் சிறப்புக் காட்சிகள் குறித்த பஞ்சாயத்தும் நடந்து வருகிறது. முன்பு முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு அதிகாலை காட்சி திரையிடப்படும். இருப்பினும், கடந்த காலங்களில் அதிகாலை காட்சியின் போது சில மோசமான சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாகக் கடந்த தீபாவளி சமயத்தில் அதிகாலை காட்சியின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. அதன் பிறகு எந்தவொரு படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை.
இதற்கிடையே லியோ விடுமுறை நாட்களில் வருவதால் சிறப்புக் காட்சிகளுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுத் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்தாலும், முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் இருக்க வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரி லியோ தயாரிப்பாளர்கள் உயர்நீதிமன்றத்திற்கும் சென்று பார்த்தார்கள். இருப்பினும், அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து 7 மணி காட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம்: தமிழ்நாட்டில் நிலைமை இப்படி இருக்கப் புதுச்சேரியில் லியோ படத்திற்குக் காலை 7 மணிக்குச் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டார். அதன்படி முதல் 4 நாட்களுக்குத் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 15 தியேட்டர்களில் லியோ படம் வெளியாகிறது.
இதற்கிடையே காலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தாலும் கூட புதுச்சேரியில் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சிறப்புக் காட்சியில் லியோ படத்தைத் திரையிட மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து புதுச்சேரியில் விஜய் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். லியோ சிறப்புக் காட்சியைத் திரையிட வேண்டும் எனக்கூறி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications