தமிழகத்தின் ஜெகன் மோகனாரே... கபசுரரே... நடிகர் விஜய்க்கு விதவிதமாக அடைமொழி சூட்டிய ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய்க்கு நாளை 46-வது பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் விதவிதமான சுவரொட்டிகளை ஓட்டி தங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Recommended Video
சுவரொட்டிகளில் இடம்பெறும் வினோதமான வாசகத்திற்கு மதுரை தான் பெயர் பெற்றது என நினைத்தால் இப்போது அந்த வரிசையில் கும்பகோணமும் இடம்பெற்றுள்ளது.
அங்கு ஒட்டப்பட்டுள்ள விஜய் பிறந்தநாள் சுவரொட்டியில் தமிழகத்தின் ஜெகன் மோகனாரே என அடைமொழி சூட்டி அசத்தியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

46-வது பிறந்தநாள்
நடிகர் விஜய்க்கு நாளை 46-வது பிறந்தநாள் என்பதால் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் தங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும் வாழ்த்தின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்களில் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் விஜய்க்கு வாழ்த்து கூறும் நிலையில், மற்றொரு தரப்பினர் விதவிதமான அடைமொழிகளுடன் போஸ்டர்கள் ஒட்டி கலக்கி வருகின்றனர்.

ஜெகன் மோகனாரே
அந்தவகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியில், தமிழகத்தின் ஜெகன் மோகன் ரெட்டி விஜய் தான் எனக் குறிப்பிட்டுட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தமிழக இளைஞர்கள் மத்தியில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது. மற்றொன்று நடிகர் விஜயே அரசியலுக்கு வந்தாலும் கூட அவர் ஜெகன்மோகன் ரெட்டியை போல் செயல்பட வேண்டும் என்பது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அரசியலில் முன்மாதிரி தலைவராக ஜெகன்மோகன் திகழ்கிறார் என்பதற்கு இந்த போஸ்டரே உதாரணம்.

காக்க வந்தவர்
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கபசுரக் குடிநீரை பருகுமாறு பொதுமக்களுக்கு சித்த மருத்துவத்துறையினர் அறிவுறுத்தி வரும் நிலையில், அதனை மையமாக வைத்து மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒரு வித்தியாச போஸ்டரை ஒட்டியுள்ளனர். எங்களை காக்கும் கபசுரரே என்ற வாசகத்தை அச்சிட்டு விஜய் மீதான தங்களின் தீவிர அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜய் அறிவிப்பு
கொரோனா பேரிடர் காலம் என்பதால் இந்தாண்டு தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மூலம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் விஜய் பிறந்தநாளில் காணப்படும் வழக்கமான கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் நாளை இருக்காது எனத் தெரிகிறது. இதனிடையே ஏழை எளியோருக்கு நிவாரண உதவிகள் மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications