பாஜகவுடன் உறவு.. புஸ்ஸி ஆனந்தை கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா.. சங்கடத்தில் சென்னை தவெக நிர்வாகிகள்!
சென்னை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜகவுடன் நல்ல உறவில் இருப்பதாக கூறி, அவரை தி நகர் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா கோர்த்துவிட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தவெகவின் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் சென்னையில் போட்டியிடுவது அக்கட்சிக்காக உழைத்து வரும் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
தவெகவின் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்வதில் தீவிரமாக இருக்கிறார் விஜய். ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விஜய் தயார் செய்துவிட்ட சூழலில், 2ஆம் கட்ட வேட்பாளர்களை விஜய் நேர்காணல் செய்து வருகிறார். இதனிடையே முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பான தகவல் கசிந்துவிட்டது. அதன்படி பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அதற்கேற்ப பெரம்பூர் தொகுதியில் தவெக அலுவலகம் திறப்பு, பரிசுப்பொருள் விநியோகம் என்று தேர்தல் பணிகள் களைகட்டுகிறது. இதனிடையே தவெகவில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த உட்கட்சி பூசல் விஜய் வரை சென்றிருப்பது தான் ஹைலைட். இதனால் புஸ்ஸி ஆனந்த் மீதான மரியாதையும் விஜய்யிடம் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
என்டிஏ உடன் கூட்டணி முயற்சிகளை புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டிருந்தார். இதனை பயன்படுத்தி ஆதவ் அர்ஜுனா தரப்பு புஸ்ஸி ஆனந்தை விஜய்யிடம் கோர்த்துவிட்டுள்ளது. அதாவது புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியை ஒட்டிய தொகுதியில் போட்டியிடலாம் என்று ஆலோசித்து பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்படியில்லை என்றால் தவெக கட்டமைப்பு சிறப்பாக இருக்கும் தொகுதியில் போட்டியிட தயாராகி வந்தார்.
ஆனால் பாஜக உடன் நல்ல உறவில் புஸ்ஸி ஆனந்த் இருப்பதாக விஜய்யிடம் கூறிய ஆதவ் அர்ஜுனா தரப்பு, பாஜக செல்வாக்குடன் இருக்கும் தி நகர் தொகுதியில் கோர்த்துவிட்டுள்ளது. இதனால் விஜய்யின் வார்த்தையை தட்ட முடியாமல் புஸ்ஸி ஆனந்த் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தவெகவுக்கு சாதகமாக இருக்கும் வில்லிவாக்கம் தொகுதியை ஆதவ் அர்ஜுனா தனக்கு ஒதுக்கிவிட்டதாகவும் சொல்கின்றனர்.
இன்னொரு பக்கம் ஜேசிடி பிரபாகர், மரிய வில்சன், ராஜ்மோகன் உள்ளிட்ட பலரும் சென்னையில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. இதனால் சென்னையில் தவெக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது. பூக்கடை குமார், தி நகர் அப்புனு, சுறா வேலு உள்ளிட்டோர் நீண்ட நாட்களாக அந்தந்த தொகுதிகளில் பணியாற்றி வந்ததால் போட்டியிட வாய்ப்பு இல்லாததால் அதிருப்தியில் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications