“அமைச்சரவையில் யார் யாரை உட்கார வைக்க வேண்டும் என்று விஜய்க்கு தெரியும்".. தேர்தலுக்கு முன்பே தடாலடி
சென்னை: "அமைச்சரவையில் யார் யாரை உட்கார வைக்க வேண்டும் என்று தலைவர் விஜய்க்கு தெரியும்" என மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். மேடைக்கு வந்த தவெக விஜய்க்கு விசில் அடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் விசில் அடித்து வரவேற்றுள்ளனர். விசில் சத்தம் அதிகமாக எழுந்ததால் விஜய் காதை பொத்திக்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், "களத்தில் முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்கப்போகிறது. வரலாற்றில் பதியப்போகும் செயல்வீரர்கள் கூட்டமாக இது இருக்கப்போகிறது. நீங்கள் தான் மக்களை நேரடியாகச் சந்திக்கப் போகிறீர்கள். மக்கள் உங்களுக்கு வரவேற்பு தருவார்கள்.
தமிழ்நாட்டில் 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றனர். 2 கோடி வீட்டில் தலா ஒரு ஓட்டு என்றால், அதுவே 40% வாக்கை கடந்து விட்டது. இன்றைய சூழலில் தவெகவுக்கு 40% வாக்குகள் உள்ளன. மக்களை சந்திப்பது தவெகவுக்கு எளிதானது. யதார்த்த நிலை தெரியாமல் எதிர்க்கட்சிகளும், மற்ற கட்சிகளும் இருக்கின்றன.
நம் கட்சியில் மூத்தவர்கள் இல்லையே எப்படி மேலாண்மை செய்வீர்கள் எனக் கேட்கிறார்கள். திமுகவில் கேஎன் நேரு இருக்கிறார், அவர் 9 தேர்தலை சந்தித்து 5 முறை வென்றிருக்கிறார். அவ்வளவு சீனியர் தனது மொத்த அனுபவத்தையும் தனது குடும்ப சொத்தை சேர்ப்பதில் தான் பயன்படுத்தி இருக்கிறார்.
திமுகவில் யாராவது ஒரு சீனியர் அவர்களின் அனுபத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தியவர் யாராவது இருக்கிறார்களா? நம் எல்லோருக்கும் இது முதல் தேர்தல். கரூர் சம்பவத்தின்போது தலைவர் விஜய் தவிர்த்த தவிப்பை, நாங்கள் யாரும் அதை மறக்கவே முடியாது. ஒரு நல்லவர் அரசியலுக்கு வந்துள்ளார். களம் தவெக பக்கம் உள்ளது. இப்படி ஒரு மக்கள் வரவேற்பு எந்த தலைவருக்கும் கிடையாது. யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என மக்களுக்கு தெரியும். நல்லவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பம். 2026ல் முன்னுதாரணமான அரசு அமையும். அமைச்சரவையில் யார் யாரை உட்கார வைக்க வேண்டும், எந்த துறைக்கு யாரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவர் விஜய்க்கு தெரியும்.
ஒவ்வொரு நாளும் எங்களை எப்படி கண்காணித்துக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல, ஆட்சிக்கு வந்தபிறகும் ஒவ்வொரு துறையையும் கவனிப்பார். 2026ல் நமது ஆட்சி தான் வரப்போகிறது. மக்கள் தயாராகி விட்டார்கள், தைரியமாக போய் வேலை செய்யுங்கள். விசில் பறக்கும்" என சிடிஆர் நிர்மல் குமார் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம், முதல் முறையாக தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், அமைச்சரவை பற்றி எல்லாம் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் பேசியது தவெக தொண்டர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications