'விஜய் வழிகாட்டுதல்படி வேட்பாளர்கள்..' நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு.. ரெடியாகும் 'மாஸ்டர்' பிளான்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கும் போட்டியிடும் நிலையில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
விஜய் மக்கள் இயக்கம் கேட்ட ஆட்டோ சின்னம்.. பின்னணி என்ன?.. இதுதான் வியூகமா?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
அதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 7 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம்
குறிப்பாக, அரசியல் கட்சிகளைத் தாண்டி இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். ஏனென்றால், கடந்த அக். மாதம் 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்டு, 129 பேர் வென்றனர். இது பல அரசியல் கட்சிகளின் ஸ்ட்ரைக் ரேட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம், கொடி
கடந்த காலங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்ற போதிலும், நடிகர் விஜயின் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தினரின் கொடியைப் பயன்படுத்த விஜய் அனுமதி அளித்திருந்தது அதுவே முதல்முறையாகும். இந்நிலையில், தற்போது அதே ஸ்டைலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு பெரிய வெற்றியைப் பெற திட்டமிட்டுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஆட்டோ சின்னம்
இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியானது. இருப்பினும், தேர்தல் ஆணையத்தில் கட்சியையோ அல்லது அமைப்பையோ பதிவு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்க முடியும் எனக் கூறி ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
விஜய் வழிகாட்டுதல்படி
தொடர்ந்து வேட்பாளர்களை அறிவிப்பது குறித்துப் பேசிய அவர், "விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்ட தலைவர்கள், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவர்கள், அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தலைமைக்கு வேட்பாளர்கள் பட்டியலை சமர்ப்பிப்பர். அதன் பிறகு விஜய் வழிகாட்டுதல்படி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்" என்று அவர் தெரிவித்தார்.