கோடு போட்ட விஜய்.. ரோடு போட்ட மக்கள் இயக்கத்தினர்.. ஸ்டர்ன்னாகும் கட்சிகள்.. ரிசல்ட் என்ன?
சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்ற நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான வெற்றியை குவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் தனது இயக்கத்தை கட்சியாக பதிவு செய்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்ககப்பட்டது. இதற்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கட்சியை பதிவு செய்யும் முயற்சியின் போது தந்தை- மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
பஜ்ரங்தள் தொண்டர் கொலை.. 3 பேரை கைது செய்த போலீஸ்.. கர்நாடகாவில் தணியுமா பதற்றம்?
இந்த நிலையில்தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. 9 மாவட்டங்களுக்கு மட்டுமே நடந்த இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட விஜய் அனுமதி அளித்தார். இந்த அறிவிப்பு மிகவும் ஆச்சரியம் கலந்த வகையில் இருந்தது. ஒரு பக்கம் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் அமைப்பாக பதிவு செய்த தனது தந்தை- தாயை எதிர்த்து நீதிமன்றம் வாசல் ஏறினார். மறுபக்கம் ரசிகர்கள் தேர்தலில் தன்னுடைய புகைப்படம், இயக்கக் கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார்.
விஜய் ரசிகர்கள்
இந்த தேர்தலில் உற்சாகமாக போட்டியிட்ட விஜய் ரசிகர்கள் 169 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில வென்றுள்ளனர். முதல் முயற்சியிலேயே இவர்களது இந்த வெற்றி மற்ற கட்சிகளை ஆச்சரியமூட்டியது. தமிழகத்தில் வெள்ளித் திரையிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் வெற்றியடையும் போக்கு நடந்து வருகிறது. அந்த வகையிலேயே எம்ஜிஆர் , திரைப்படங்கள் மற்றும் அரசியலில் வெற்றி பெற்றார். ஆனால் மற்றொரு உச்சநட்சத்திரமான சிவாஜி கணேசனுக்கு அரசியலில் தோல்வியே கிடைத்தது.
குழந்தை நட்சத்திரம்
அது போல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பன்முகத் திறமைகளை கொண்ட கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார். ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துவிட்டு பின்னர் உடல்நிலையை கருத்தில் கொண்டு தனது முடிவிலிருந்து பின்வாங்கினார். அது போல் அடுத்த தலைமுறையினர்களான விஜய்- அஜித் ஆகியோரில், அஜித் ஏற்கெனவே ஒரு அறிக்கையை வெளியிட்டார. அதில் அரசியலில் தன்னை தொடர்புபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுவிட்டார். ஆனால் விஜய் நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் தனது ரசிகர்களை களம் இறக்கியுள்ளார்.
திராவிடக் கட்சிகள்
அது போல் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என அரசியலில் களம் கண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல் முயற்சியிலேயே ஒரு தொகுதி என்றாலும் வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது மிகப் பெரிய கட்சி என குறுகிய காலத்திலேயே சாதித்தார். ஆனாலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்றார். தனது திரைப்படத்தின் மூலம் ஜிஎஸ்டி குறித்து பொட்டிற் அடித்தாற் போல் விஜய் நடித்த சர்காரில் வசனங்கள் இடம் பெற்றிருந்தன.
வருமான வரித் துறை
அது போல் அவரது வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனை நடைபெற்ற போது லட்சணக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக இருந்தனர். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தொடங்குவதற்கு முன்னர் விஜயகாந்தும் தனது ரசிகர்களை போட்டியிட அனுமதித்தார். அப்போது அவரது ரசிகர்கள் கணிசமான இடங்களில் வென்றனர்.
மக்கள் செல்வாக்கு
அதற்கு அடுத்து மக்களின் செல்வாக்கை உணர்ந்த விஜயகாந்த் கட்சி தொடங்கி பெரிய பெரிய தேர்தலை சந்தித்தார். அதே பாணியை விஜய் கையில் எடுத்துள்ளார். இந்த சிறிய தேர்தல்களில் ஆழம் பார்த்துவிட்டு பின்னர் பெரிய தேர்தல்களில் விஜய் களமிறங்கக் கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்களின் செயல்பாட்டை பொருத்தே இளைய தளபதி நேரடி அரசியலுக்கு வருவார் என சொல்லப்படுகிறது.
எத்தனை இடங்களில்
இந்த நிலையில் இன்றைய தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் பரமேஸ் வெற்றி பெற்றுள்ளார். அது போல் வாலாஜா நகராட்சியில் 3ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் மோகன்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். குமாரபாளையம் நகராட்சியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் வேல்முருகன் வெற்றி வெற்றுள்ளார்.
விஜய் ரசிகர்கள் வெற்றி
அது போல் பொன்னேரி நகராட்சியில் 6ஆவது வார்டில் மணிமாலா சிலம்பரசன், விருதுநகர் மாவட்டம் தெற்கு கோடிகுளம் நகராட்சியில் 5ஆவது வார்டில் ராஜசேகரன் வெற்றி பெற்றதாக தெரிகிறது. அது போல் அனுமந்தன்பட்டி நகராட்சி, தேனி மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டைகுப்பத்திலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வென்றதாக கூறப்படுகிறது.