அதிமுகவை பற்றி விஜய் அடக்கி வாசித்தது ஏன் தெரியுமா? செம ஸ்கெட்ச்.. புரிகிறதா பிகிலு?
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்க்க வலிமையான தலைவர்கள் களத்தில் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதைச் செய்யக்கூடியவராக விஜய் இருப்பார் என்று பலரும் பேசத் தொடங்கி உள்ளனர்.
கடந்த 2019இல் இருந்து திமுக தொடர் வெற்றிகளைக் கண்டு வருகிறது. இதை ஸ்டாலின் வெற்றி என்பதைவிட வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்பது முக்கிய காரணமாக உள்ளது. அதிமுகவும் பாஜகவும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேர்ந்து போட்டியிட்டும் திமுவை தோற்கடிக்க முடியவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் தனித்து களம் கண்டன. அப்போதும் திமுக கூட்டணிதான் 40 தொகுதிகளில் வென்றது.

ஆக, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை ரஜினி நிரப்புவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய போது திமுகவை மிக ஆவேசமாக எதிர்த்தார். அதுவும் நிறைவேறவில்லை. இப்போதைக்கு திமுக கூட்டணி பலம் அசைக்கமுடியாத அளவு உள்ளது. எடப்பாடி பழனிசாமியோ, அண்ணாமலையோ ஒரு மாற்றுச் சக்தியாக உருவெடுக்கவில்லை. அண்ணாமலையின் அரசியல் கடந்த சில மாதங்களாக ஒன்றுமே இல்லை. ஒரு நாள் அரசியல் களத்தில் இல்லை என்றாலே மக்கள் மறந்துவிடுவார்கள். அண்ணாமலை 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வரும்போது விஜய் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து நிற்பதற்காக வாய்ப்புகள் அதிகம்.

அவர் நேற்று நடத்திய மாநாடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி நடத்திய மாநாடு இதன் அருகிலேயே வர முடியாது. பெரிய அளவில் சொதப்பல்கள் இல்லை. சொல்லப் போனால் நேற்று விஜய் ஒரு சாமர்த்தியமான விசயத்தைச் செய்தார். அவர் திமுகவை ஊழலைத் தான் எதிர்க்கிறார். அந்தக் கட்சி முன்வைக்கும் அண்ணாதுரை, பெரியார் ஆகிய தலைவர்களை ஏற்கிறார். ஒரு காலத்தில் காமராஜரை திமுக எதிர்த்தது. அவரை வீழ்த்தியது. ஆட்சிக்கு வந்த பிறகு கர்மவீரர் காமராஜர் ஆட்சியை ஆதரித்தது. அதேபோல்தான் விஜய் காமராஜரையும் உள்ளே இழுக்கிறார்.
இதனால் திமுக கொள்கையால் ஈர்க்கப்பட்ட அதில் இணைந்த இளைஞர்கள் விஜய்யை ஆதரிக்கலாம். அதேபோல் அவர் மற்றொரு பக்கம் அதிமுகவை விமர்சிக்காமல் அதை மறைத்துள்ளார். இப்போது அதிமுகவில் பலமான தலைவர் இல்லை. அந்தக் கட்சியில் ஜெயலலிதா போல் வசீகரமான தலைவர் இல்லை. அதை மனதில் வைத்து அதிமுக தொண்டர்களை தன் பக்கம் வளைத்துப் போடும்படி தனது பேச்சில் நேற்று எம்.ஜி.ஆரை தனக்கு உதாரணம் காட்டி பேசினார் விஜய். இதனால் அதிமுக ஆதரவாளர்கள் விஜய் பக்கம் வரலாம். இப்போதே அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் விஜய்யின் திமுக எதிர்ப்பை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.

விஜய் திமுக முன்வைத்த அனைத்து கொள்கையையும் பேசுகிறார். திமுகவுக்கும் தவெகவுக்கும் பெரிய அளவில் கொள்கை முரண்பாடு இல்லை. ஆனால், இதையே திமுக பேசினால் அதிமுக ஏற்காது. விஜய் பேசும் போது திமுக முன்வைத்த கோஷத்தையும் ஏற்கிறது. நீட் எதிர்ப்பை அதிமுக பெரிய அளவில் திமுகவுக்கு ஆதரவு தரவில்லை. அதை விமர்சித்தது. விஜய் நீட் எதிர்ப்பை பேசிக் கொண்டே அதிமுக ஆதரவைப் பெற்றுள்ளார். சொல்லப் போனால் திமுகவின் திராவிடக் கொள்கை என்ற ஊசியை எடுத்து அவர்கள் கண்களையே குத்தப்பார்க்கிறார். இது ஒரு புத்திசாலித்தனமான மூவ் என்கிறார்கள் பலர்.
மேலும் அதிமுக ஆளும் கட்சியாக இப்போது இல்லை. அதை விமர்சிப்பதால் விஜய்க்கு வாக்குகள் வரப் போவதில்லை. திமுக எதிர்ப்பைக் காட்டி அதிமுக ஆதரவாளர்களை உள்ளே கொண்டு வர முயல்கிறார் விஜய். கூடவே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விசிக போன்ற சக்திகளுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கிறார். வரும் தேர்தலில் திமுக 200 தொகுதியில் வெல்லும் என்ற கனவில் ஸ்டாலின் இருக்கிறார். ஆக, கடந்த முறை போட்டியிட்டதைவிடக் கூடுதல் தொகுதிகள் அக்கட்சிக்குத் தேவை. மேலும் அதிமுக சீட்டுகளைச் சரிப்பதன் மூலமும் அதைச் செய்யலாம். அங்கே இப்போது விஜய் வந்து நிற்கிறார். அதிமுகவை விரும்பாதவர்கள் திமுகவுக்குப் போகமாட்டார்கள். அவர்களின் விருப்பத்தேர்வாக விஜய் இருப்பார். அதேநேரம் ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுகளையும் இழுப்பார்.
இதை எல்லாம் மனதில் வைத்தே விஜய் தன் ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளார். அவரது பேச்சு நேற்று 40 நிமிடங்கள் மேல் இருந்தது. அதைச் சிலர் சினிமா ஸ்கிரிப்ட் என சொல்லலாம். ஆனால், அதைச் சரியாகப் பேசி பலரது கவனத்தை அவர் ஈர்த்துள்ளார். எனவேதான் அதிமுகவை எதிர்க்கும் விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் விஜய்க்கு வாழ்த்து சொல்கின்றன.












Click it and Unblock the Notifications