டென்ஷன், டென்ஷன்.. விஜய்க்கு அடுத்த 5 ஆண்டுக்கும் சவால் தான்!
சென்னை: தமிழ்நாடு அரசியலில் முக்கிய திருப்பமாக காங்கிரஸ் கட்சி திமுக உடனான 20 வருட கூட்டணியை உடைத்து தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. ஆனாலும் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 6 உறுப்பினர்கள் அவசியம் என்பதால் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் உருவாகியுள்ள தொங்கு சட்டசபை நிலையில் விஜய்க்கு தற்போது இருக்கும் டென்ஷன் அடுத்த 5 வருட ஆட்சியில் தொடர உள்ளது என்பது தான் தவெக-வினரின் தற்போதைய நிலை. இதனாலேயே அதிமுக உடன் கூட்டணி வைக்க முயற்சி நடந்து வருகிறது.

118 மேஜிக் எண்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் ஆட்சியை அமைக்க குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. விஜய் போட்டியிட்ட மற்றொரு தொகுதியைச் சேர்த்தாலும் பெரும்பான்மைக்கு இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் தவெக கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சியை அமைப்பது என சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டணி தான் விஜய்-க்கு அடுத்த 5 வருடத்திற்கு ஆட்சியை தக்கவைப்பதில் பெரும் சவாலாக இருக்க போகிறது.
6 உறுப்பினர்கள் தேவை
காங்கிரஸின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும், இன்னும் 6 உறுப்பினர்களின் உதவி தவெகவுக்கு அவசியமாக உள்ளது. இதனால் பெரும்பான்மையை எட்டுவதற்கான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலைமை தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
சிறு கட்சிகள் மற்றும் அதிமுக தலைவர்களின் பங்கு
பெரும்பான்மையை எட்டுவதற்காக தவெக தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தக் கட்சிகளின் ஆதரவு ஆட்சியை அமைப்பதற்கான முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இருந்து சில முக்கிய தலைவர்கள் தலைமையில் ஒரு பகுதி உறுப்பினர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது உண்மையாக இருந்தால் அரசியல் சமநிலை தலைகீழாக மாறக்கூடும், திமுக - காங்கிரஸ் பிளவு, அதிமுக-வில் இருந்து முக்கிய தலைகள் வெளியாகும் தகவல் என தமிழ்நாட்டு அரசியல் கட்டமைப்பை தவெக மாற்றி வருகிறது.
தொங்கு சட்டசபை நிலை
தவெக தலைமையிலான அரசு அமைந்தாலும் அது ஒரு "தொங்கு சட்டசபை" நிலையாகவே இருக்கும். இத்தகைய சூழலில் ஆட்சியின் நிலைத்தன்மை எப்போதும் சந்தேகத்துக்கு உட்பட்டதாக இருக்கும். ஒரு கட்சி தனியாக 118 இடங்களை வென்று ஆட்சி அமைத்தால் அது இயல்பாக 5 ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்பு அதிகம்.
ஆனால் கூட்டணி ஆதரவில் உருவாகும் அரசு, கூட்டணி கட்சிகளின் நம்பிக்கையிலேயே நிலைத்து நிற்கும். ஆதரவு திரும்பப் பெறப்பட்டால் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் வாய்ப்பு உள்ளது.
விஜய்க்கு மிகப்பெரிய சவால்
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், அதற்குப் பிறகு வரும் சவால்களே முக்கியமானவையாக உள்ளன. மத்திய அரசின் திட்டங்கள், பட்ஜெட் முடிவுகள், கூட்டணி கட்சிகளின் கொள்கை நிலைப்பாடுகள், முக்கிய நல திட்டங்கள், ஆட்சியில் எடுக்கப்படும் நிலைப்பாடுகளும், முடிவுகள் என அனைத்தும் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்.
குறிப்பாக மத்திய அரசின் கொள்கைகளுக்கு தவெக ஆதரவாகச் செயல்பட்டால் கூட்டணி கட்சிகளுக்கு விலக வாய்ப்பு அதிகம். இந்த அதிருப்தி வெளிப்படையாக உருவானால் ஆதரவைத் திரும்பப் பெறும் சூழல் ஏற்பட்டு, தவெக மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வரலாம்.
2031 வரை ஆட்சி நீடிக்குமா?
இந்த அனைத்து அரசியல் மாற்றங்களின் பின்னணியில் தவெக தலைமையிலான அரசு 2031 ஆம் ஆண்டு வரை முழுமையாக நீடிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதேபோல் விஜய் அறிவித்த நலத்திட்டங்கள் விரைவில் செயல்படுத்தாவிட்டாலும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவும்.















Click it and Unblock the Notifications