“இது எல்லா தகப்பனுக்கும் கிடைப்பதில்லை”.. நா தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நா தழுதழுக்க நெகிழ்ச்சிகரமாகப் பேசியுள்ளார். விஜய், பல கஷ்டங்களை மீறி முதல்வராகப் பதவியேற்றிருப்பதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இன்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் விஜய். விஜய் பதவியேற்பு விழாவில், இயக்குநரும், தவெக தலைவர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் விஜய் முதல்வராக பதவியேற்ற தருணத்தில் கண்கலங்கினார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில், "இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? என்னுடைய கனவை என் பிள்ளை நிறைவேற்றியிருக்கிறார். இன்று தமிழ்நாட்டுக்கே அவர் முதல்வராக இருக்கிறார். அவர் சொன்னால் செய்துவிடுவார்.
அவர் எப்போதுமே எந்த விஷயத்தைச் சொன்னாலும், கண்டிப்பாக அதைச் செய்வார். அவர் சும்மா பேச்சுக்கு சொல்பவரில்லை. 'நான் சும்மா பேசுவதில்லை, என்ன முடியுமோ அதைத்தான் பேசுவேன். என்ன பேசுகிறேனோ அதைத்தான் செய்வேன்' என்று அவர் சிறு வயதிலிருந்தே அடிக்கடி சொல்வார்.
இது எல்லா தகப்பனுக்கும் கிடைப்பதில்லை. ஒரு நடிகராக உச்ச இடத்துக்குச் சென்று, அங்கிருந்து அதனை விட்டுவிட்டு, இங்கு வந்துள்ளார். ஆனால், நான் உணர்ச்சிவயப்பட்டது எதற்கென்றால், அவர் பட்ட கஷ்டங்களை நினைத்துதான். அவற்றையெல்லாம் மீறி 'ஜோசப் விஜய் ஆகிய நான்' என்று சொல்லும்போது நான் உணர்ச்சிவசப்பட்டேன்.
விஜய் பிறந்தபோது நான் உதவி இயக்குநராக இருந்தேன். விஜய்யின் சிறு வயதில் சாப்பாட்டிற்கு கூட மிகவும் சிரமப்பட்டோம். விஜய்க்கு எல்லாமே நினைவிருக்கிறது" என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications