இதயம் திறந்து.. கைகளை விரித்துக் காத்திருப்பேன்.. மாநாட்டுக்கு ‘இவங்க’ வரவேண்டாம்! விஜய் வேண்டுகோள்!
சென்னை: தமிழக கட்சி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற 21ஆம் தேதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற உள்ளது. இதையொட்டி தனது தொண்டர்களுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதி இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய். அதில் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள், உடல் நலம் குன்றியோர் மாநாட்டுக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை துவங்கியுள்ளன. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக ஊழிட்ட கட்சிகள் மாநாடுகள், தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசுகளின் புதிய வரவான விஜய் தனது தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரை நடத்துகிறார் முதல் மாநாடு வட மாவட்டமான விழுப்புரத்தில் நடைபெற்ற நிலையில் தென் மாவட்டங்களில் தனக்கு இருக்கும் செல்வாக்கை வெளிக்காட்ட மதுரையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் விஜய்.

தவெக விஜய்
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் இதற்காக 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநாடு தொடர்பாக இரண்டாவது கடிதத்தை தனது தொண்டர்களுக்கு எழுதியிருக்கிறார் விஜய். அதில்,"நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட, புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ, இன்னும் சில மாதங்களே உள்ளன.
தவெக மாநில மாநாடு
1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள், இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.
விஜய் கடிதம்
தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ராணுவக் கட்டுப்பாடு
மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட 'மனசாட்சி உள்ள மக்களாட்சி' என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம்.
அரசியல் வரலாறு
மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன். உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications