உங்க விஜய்..நான் வரேன்! அடுத்த ஆக்சனுக்கு தயாரான ‘தளபதி’.. பனையூரில் பரபரத்த மீட்டிங்! என்ன பிளான்?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். மதுரை மாநாடு முடிவடைந்தும் தன்னைப் பற்றியே அனைத்துக் கட்சிகளும் பேசி வருவதைக் கவனித்துள்ள அவர், அடுத்த அதிரடியாகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக இன்று பனையூரில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழகம் தயாராகி வரும் நிலையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், இன்னும் மக்களைச் சந்திக்கவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் அவ்வளவாகப் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. அக்டோபர் மாநாடு, சென்னை போராட்டம், பரந்தூர் மக்களைச் சந்தித்தது, மதுரை மாநாடு என சில நிகழ்வுகளில் மட்டுமே வெளியே தலைகாட்டினார். இதனால் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனம் விஜய் மீது முன்வைக்கப்பட்டது.

நடிகர் விஜய்
அதே நேரத்தில் நன்கு திட்டமிடலுடன் நடைபெற்ற மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பேசுபொருளானது. ஒரு சில விவகாரங்கள் விஜய்க்குப் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் களப்பணியாற்றுங்கள் எனத் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதினார் விஜய். இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் அனைத்துக் கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் விஜய் மாநாடு குறித்தும், மாநாட்டில் விஜயின் பேச்சு குறித்தும் பேசி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
மாநாடு முடிந்து பத்து நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் தன்னைப் பற்றியே அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதைக் கவனித்த விஜய், அடுத்த அதிரடிக்குத் தயாராக இருக்கிறார். கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது போல, அடுத்ததாக விழுப்புரம், மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளில் விஜய் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டங்களை நடத்த இருக்கிறார்.
அரசியல் சுற்றுப்பயணம்
தொடர்ந்து தமிழகம் முழுவதும் கட்சியின் அமைப்பு ரீதியாக அதாவது இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மொத்தம் 132 இடங்களில் விஜய் மக்களைச் சந்திக்க இருக்கிறார். மண்டல வாரியாகத் தொகுதிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 10 கட்சி மாவட்டங்கள் என விஜய்யின் சுற்றுப்பயணம் 13 கட்டமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
மக்கள் சந்திப்பு
இந்த நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவது, பிரம்மாண்டமாக நடத்துவது என்பது குறித்து சென்னையைச் சுற்றியுள்ள 32 மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் ஒருசேர விஜய் நிச்சயம் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்குப் பதிலளிக்க முடியும் என வெளிப்படையாகவே பேசினார்களாம்.
விஜயின் பேச்சு
தொடர்ந்து வீடியோ கால் மூலம் மாநாட்டில் விஜய் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ளாமல் களப்பணியாற்றுங்கள் நிச்சயம் உங்கள் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என விஜய் நிர்வாகிகளிடம் உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்து தங்கள் பகுதிகளில் ஆலோசனை கூட்டங்களை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications