முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்?
சென்னை: தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய வழக்கின் விசாரணை நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
விஜய் - சங்கீதா விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், நாளை நடைபெற உள்ள விசாரணை தவெகவினர் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. வழக்கின் விசாரணைக்காக இருவருமே நேரில் ஆஜராக வாய்ப்பு இல்லை எனவும் வழக்கறிஞர்கள் ஆஜராக கூடும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு
தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை விவாகரத்து மனுவில் கூறியிருந்த சங்கீதா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும், அவரது சமூக அந்தஸ்துக்கு ஏற்றவாறு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி விசாரித்தது. அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், இரு தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகினர். விஜய்யும் நேரில் ஆஜர் ஆகவில்லை. சங்கீதாவும் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 15 (நாளை) வரை ஒத்திவைத்தது.
விஜய் - சங்கீதா இணைவதாக
இதன்படி, விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையின் போது இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் என்று கூறப்படுகிறது. செங்கல்பட்டு 1-வது குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. விஜய் முதல்வரான பிறகு முதல் முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதிக கவனம் பெற்றுள்ளது.
விஜய் - சங்கீதா ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதனை அடிப்படையாக கொண்டு சில ஆங்கில ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. அதாவது, விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் மீண்டும் இணைந்து வாழ்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும், குடும்ப காரணங்களுக்காக மீண்டும் இணைய விரும்புவதாகவும் இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
விஜய் - சங்கீதா இடையே விஜய்யின் தாய் ஷோபா பாலமாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. எனினும், இது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது தொண்டர்கள் பலரும் விஜய்யும் அவரது மனைவியும் மீண்டும் சேருவார்களா என எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் நாளை திங்கட்கிழமை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வர இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இடையேயும் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications