விஜய் சென்னைக்கு போவதற்கு பதில் கரூரில் மருத்துவமனைக்கு போயிருக்க வேண்டாமா?
சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தையடுத்து பல அரசியல் கட்சியினர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நடிகர் விஜய், இப்படியான சூழலில் சென்னைக்கு போனதற்கு பதில், கரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும். அதேபோல் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமும் அளித்திருக்க வேண்டும்.
நடிகர் விஜய் கரூரில் இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். தனது பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக வசைபாடினார். அதேபோல் தமிழக அரசையும் பல்வேறு கேள்விகள் கேட்டார். வழக்கமான பிரச்சாரம் சரியான முறையில் முடிந்திருக்க வேண்டியது. ஆனால் விஜய்யை பார்க்கும் ஆசையில் பிரச்சாரம் முடியும் போது, பலரும் முண்டியடித்து சென்றனர். இதுதான் மிகப்பெரிய அசம்பாவிதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் வந்து பிரச்சாரம் செய்த சாலை 100 அடி சாலையாகும்.

இதில் 10 அடி, 10 அடி என இருபக்கமும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டதால், குறைந்த தூரத்தில் பலரும் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி நெரிசலில் நின்ற மக்கள், விஜய்யை எப்படியாவது அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று முன்னோக்கி சென்றுள்ளனர். அப்போது விஜய் சட்டரை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் மின்சாரம் திடீரென போனதால், பலரும் விஜய் பேச்சை கேட்க முன்னோக்கி வந்தார்களாம். அதனாலும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதுவும் மிகப்பெரிய அசம்பாவிதத்திற்கு காரணம் என உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் அசம்பாவிதம் நிகழ்ந்த உடனேயே ஆளும் கட்சியான திமுகவும் சரி, எதிர்க்கட்சியான அதிமுகவும் சரி, உடனே களத்தில் இறங்கி பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கிவிட்டன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இப்படியான சூழலில் திருச்சி சென்று, தனி விமானம் மூலம் சென்னை சென்றுள்ளார் விஜய். ஆனால் நடிகர் விஜய், சென்னைக்கு செல்வதற்கு பதில், கரூருக்கு சென்று ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பக்கத்தில் இருந்து உதவிகளை செய்திருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல் பலர் உயிரிழந்த நிலையில், அதுபற்றி செய்தியாளர்கள் கேட்ட போது எந்த பதிலும் கூறாமல், பத்திரிக்கையாளர்களை சந்திக்காமலும் விஜய் சென்றுள்ளார். நடிகர் விஜய் சென்னைக்கு திரும்பியதால், தவெக இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்றே தெரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் இதை முன்னால் நின்று இந்த பிரச்சனையில் தொண்டர்களுக்கு வழிநடத்தியிருக்க வேண்டும் என்றும், சென்னைக்கு திரும்புறதுக்கு பதிலா மருத்துவமனைக்குப் போயிருக்க வேண்டும் என்றும் விஜய்க்கு எப்படி கையாள வேண்டும் என்று தெரியவில்லை என்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications