பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்!
சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம் ஜூன் 9ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை இந்தத் திட்டத்தின் தொடக்க விழா தாமதமாகிய நிலையில், நாளை மறுநாள் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க இருக்கிறார்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'சிங்கப்பெண் அதிரடிப் படை' திட்டம் வரும் ஜூன் 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது. சமீபத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

தற்போது இத்திட்டம் முறைப்படி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கண்டறிந்து தண்டிக்க இந்தச் சிறப்புப் படை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களுக்கு அருகில் பெண்களைக் கேலி செய்பவர்கள் மற்றும் அத்துமீறலில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க இந்த அதிரடிப் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவர். இத்திட்டத்தின்கீழ்பெண் காவலர்களுக்குச் சிறப்பு தற்காப்புப் பயிற்சிகள் மற்றும் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு களமிறக்கப்படுகிறார்கள்.
தமிழக முதல்வர் விஜய் ஜூன் 9ஆம் தேதி இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக முக்கிய மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீருடை மட்டுமின்றி, சிவில் உடைகளிலும் பெண் காவலர்கள் நடமாடி குற்றவாளிகளை ரகசியமாகக் கண்காணித்துக் கைது செய்வார்கள்.
ஆபத்துக் காலங்களில் பெண்கள் இவர்களை உடனே தொடர்புகொள்ளும் வகையில் தனித்துவமான அவசர உதவி எண்களும், மொபைல் ஆப் வசதிகளும் ஜூன் 9 அன்று அறிமுகமாக வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதோடு மட்டுமின்றி, அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கவும் தனிப் பிரிவு செயல்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் 2 முறை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் புதிய டிஜிபி நியமனம் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. தற்போது புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட்டு அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்துவிட்ட சூழலில், இந்த திட்டம் நாளை மறுநாள் தொடங்கி வைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications