சீரியஸாகும் சிவகங்கை மேட்டர்.. வியூகம் வகுக்கும் விஜய்! உள்துறை அமைச்சர் ஸ்டாலின்.. பரபர பாலிடிக்ஸ்!
சென்னை: பரபரப்பாகிக் கொண்டே செல்கிறது சிவகங்கை அஜித்குமார் காவல் மரணம். அஜித் குமார் கொடூரமாக போலீஸாரால் தாக்கி கொலை செய்யப்பட்டது வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கும் அளவில் நீதிபதிகள் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க அஜித் குமார் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தற்போது போராட்டத்தையும் அறிவித்திருக்கிறார். குறிப்பாக அந்த அறிக்கையில் உள்துறை அமைச்சர் ஸ்டாலின் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே அந்த கோவிலுக்குச் சென்ற மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தன்னுடைய நகைகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணுக்கு உதவிய அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் விசாரணையின் போது அஜித்குமார் திடீரென உயிரிழந்தார். அஜித் குமாரை கொடூரமாக தாக்கி போலீசார் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீஸ் சார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அஜித்குமாரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்ட நிலையில் பலத்த பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. மேலும், அஜித்குமாரை தாக்கியதாக புகாருக்குள்ளான ஆறு காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட விஜய்," அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது." என கூறியிருந்தார்.
நடிகர் விஜய்யின் இந்த அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உள்துறை அமைச்சர் என குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் இதுவரை யாரும் எதிர்க்கட்சித் தலைவராகவே இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலின் எனவே குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் முதன் முதலாக விஜய் முதலமைச்சர் ஸ்டாலினை உள்துறை அமைச்சர் ஸ்டாலின் என குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க சென்னையில் வரும் மூன்றாம் தேதி இந்த சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த். விஜய் அறிக்கை அரசியல் மட்டுமே செய்து வருகிறார். கள அரசியலுக்கு வருவதில்லை என்ற விமர்சனம் ஏற்கனவே முன் வைக்கப்படுகிறது. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்ததை தவிர வேறு எந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை.
இந்நிலையில் இரண்டாவது முறையாக ஒரு பிரச்சினையை முன்னிறுத்தி விஜய் போராட்டத்தை அறிவித்திருக்கிறார். அதில் விஜய் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். விஜய் கலந்து கொள்வாரா அல்லது வழக்கம் போல் கட்சியினரை முன்னிறுத்துவாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications