விஜய் தந்திரக்காரர்! நல்லா புரிஞ்சிக்கோங்க! பாஜக பிடியில் சிக்கிவிட்டார்! ரவிக்குமார் எம்பி
சென்னை: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால்தான் என நாம் முன்பிருந்தே கூறி வருகிறோம். நடிகர் விஜய்யின் தந்திரங்களை புரிந்து கொள்ளுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாஜக நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்!

விஜய் தரப்பின் மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பாஜகவின் பிடியில் விஜய் சிக்கிக் கொண்டுவிட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன். நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பாஜக சொன்னதால்தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம்.
திமுகவுக்குச் செல்லும் சுமார் 14% மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவிடாமல் செய்வது, அதன் பின்னர் மகாராஷ்டிரா மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய்.
பாஜகவை கொள்கை எதிரி என்பதும், திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்கிறது எனக் கூறுவதும்; காங்கிரஸ் கட்சியோடு தான் நெருக்கமாக இருப்பது போன்றத் தோற்றத்தை ஏற்படுத்துவதும் (இதற்குக் காங்கிரஸ் மேலிடத்தில் சிலர் இடமளிப்பது வேதனையானது) சிறுபான்மையினரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் கையாளும் தந்திரங்கள்.
பாஜக அணியில் அவர் சேர்ந்துவிட்டால் இந்த தந்திரங்கள் பலிக்காமல் போய்விடும். அதுமட்டுமின்றி அதிமுக வாக்கு வங்கியும் காப்பாற்றப்பட்டு அதை பலவீனப்படுத்துவது என்ற பாஜக- விஜய் நோக்கமும் தோற்றுவிடும்.
எனவே, பாஜக அணியில் அவரைச் சேர்க்காமல் தனித்து நிற்க வைத்து தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறவே பாஜக திட்டமிடும் எனக் கருதுகிறேன்.
பாஜகவினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ரவிக்குமார் எம்.பி
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி தவெகவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
அதில் "கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும். சிபிஐ மாதந்தோறும் விசாரணை அறிக்கையை அஜய் ரஸ்தோகியிடம் தர வேண்டும். அந்த ஆணையத்தில் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கவே கூடாது" எந நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications