கனத்த இதயத்துடன் 35 மணி நேரமாக வீட்டில் "கலங்கி"! நீலாங்கரை வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார் விஜய்
சென்னை: கரூரில் தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் புகுந்த விஜய், அதன் பின்னர் தற்போது முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் எங்குச் சென்றார் என சஸ்பென்ஸாக இருந்த நிலையில் தற்போது பட்டினம்பாக்கம் இல்லத்தில் உள்ளார்.
கடந்த சனிக்கிழமை கரூரில் இருந்து அவசர அவசரமாக சென்னை வந்த விஜய், இரவு சரியாக 11 மணிக்கு நீலாங்கரை வீட்டிற்குள் சென்றார். அவரது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவர் நேற்று முழுக்க வெளியே வரவில்லை. அவரை கைது செய்யக் கோரி பெரியார் அமைப்புகள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையிலும் அவர் வெளியே வரவில்லை.

ரூ 20 லட்சம் நிதி
தனது வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அந்த ஆலோசனையை தொடர்ந்தே, விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு தலா ரூ 20 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 2 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்.
வெடிகுண்டு சோதனை
மேலும் நேற்று அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். அப்போதும் அவர் வெளியே வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு தனது நீலாங்கரை வீட்டிலிருந்து விஜய் காரில் புறப்பட்டு ஈசிஆர் வழியாக சென்றுக் கொண்டிருக்கிறார்.
அவர் எங்கு செல்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு அவர் புறப்பட்டு செல்லலாம் என தெரியவந்தது. மேலும் கரூர் செல்ல தவெக சார்பில் காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருப்பதால் அவர் அங்கு செல்ல வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. எனவே அவர் பட்டினம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான இன்னொரு வீட்டிற்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்பட்டது.
பாதுகாப்பு பணி
விஜய்யுடன் ஒய் பிரிவு போலீஸார் இன்னொரு வாகனத்தில் சென்றனர். விமான நிலையம் செல்லும் சாலையில் அவரது கார் செல்லாமல் திருவான்மியூர் சாலையில் அவருடைய கார் பயணித்ததால் அவர் கரூர் செல்லவில்லை என்பது உறுதியானது.
15 ஆவது மாடியில் விஜய்
இதையடுத்து அடையாறை தாண்டி அவருடைய கார் சென்றுக் கொண்டிருந்த நிலையில் அவர் எங்கே செல்கிறார் என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் யூகித்தது போலவே அவர் பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் 15 ஆவது மாடியில் இருக்கும் வீட்டிற்குச் சென்றார்.
வீடு திரும்பும் விஜய்
அவர் சென்றதுமே அவரது வீட்டிற்கு 3 போலீஸார் சென்றனர். அவர் இன்று யாரையாவது சந்தித்து ஆலோசனை நடத்துகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இன்று யாரையும் அவர் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கவில்லை என்றும் விஜய் தரப்பு கூறுகிறது. மேலும் அவர் மாலையே நீலாங்கரை வீடு திரும்புவார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு தடை கோரி, கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்படவில்லை.
4 பேர் மீது வழக்கு
இதனிடையே பிரச்சாரத்தின் போது உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications