வித்யாவை விஜய் மறக்கவில்லை; நான் கண்கலங்கிவிட்டேன்: விஜய் சித்தி எமோஷனல் பேச்சு
சென்னை: நடிகர் விஜய் தனது சகோதரியின் மரணத்தை இன்றுவரை மறக்கமுடியாமல் மனதில் வைத்து வருந்திக் கொண்டே இருக்கிறார் என்று அவரது சித்தி தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து விஜய் தன் குடும்பத்தை அதிகமாக முன்னிறுத்தவில்லை. அதற்குக் காரணம், ஏற்கெனவே திமுக ஒரு குடும்பக் கட்சி என்று முத்திரை குத்தப்படுகிறது. அதையே நாமும் செய்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சில ஆண்டுகள் முன்னதாக கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்ட போது அதை உடனடியாக தடுத்தார். அதில், தன் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்தார். சட்டரீதியாக அதற்கு நடவடிக்கை எடுத்தார் விஜய்.

அதன்பின்னர் விஜய்யின் தாயார் ஷோபா நடந்த விசயங்கள் குறித்து விளக்கம் அளித்திருந்தார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து பனையூரில் கொடி அறிமுக விழா நடத்திய போது அவரது பெற்றோர்கள் தொண்டர்கள் வரிசையில் அமரவைக்கப்பட்டனர். விக்கிரவாண்டியில் நடந்த அரசியல் மாநாட்டில், பெற்றோரை மேடை ஏற்றவே இல்லை விஜய். ஆனால், ஆசீர்வாதம் பெறுவதற்காகக் கீழே அவரே இறங்கிவந்தார். கட்சியில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவரது உரையில் விஜய் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார். மாநாட்டை ஒட்டி ஊடகங்களில் விஜய்யின் தாயார் கவிதை நடையில் வாழ்த்து சொன்னதும் வெளியானது.
இந்நிலையில்தான் விஜய்யின் சித்தி மாநாடு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டில் ஆரம்பக் கால விஜய் வாழ்க்கை குறித்துக் கூறியுள்ளார். இவர் வேறு யாரும் இல்லை. நடிகர் விக்ராந்த் அம்மா. அதாவது விஜய்யின் சித்தி ஷீலா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் விஜய் அரசியல் மாநாடு பற்றிய பல விசயங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசி இருக்கிறார்.
அவர், "விஜய் மாநாடு நடக்கும் போது மழை வரும் என்று வானிலை அறிக்கையில் சொன்னார்கள். மழை வந்தால் கூட்டம் கெட்டு விடுமே என்று பயந்து கொண்டே இருந்தேன். அவர் நல்ல மனசுக்கு அங்கே மழை வெள்ளம் வரவில்லை. மக்கள் வெள்ளம்தான் வந்தது. அதுவே பெரிய ஆசீர்வாதம்தான். நான் சித்தியா இருப்பதே பாக்கியம். அதைவிட இந்த மாதிரியான காட்சிகளைப் பார்ப்பது அதைவிடப் பாக்கியம்.
விஜய் இயல்பாக மிகப் பொறுமை. அதே எப்படி மெதுவாக வாழ்க்கையில் உயர்ந்து வந்தாரோ அதே மாதிரி அவர் ஏற்றிய அந்தக் கொடி பொறுமையாக மேலே ஏறிப் போய் பறந்தது. அந்தக் கொடி மாதிரி அவர் உயரத்தில் பறக்கப் போகிறார். இனிமேல் அந்தக் கொடி மட்டும் தான் தமிழ்நாட்டில் பறக்கப் போகிறது பாருங்கள். இப்படிப் பல இடங்களில் என்னை அறியாமல் நான் கண்கலங்கிவிட்டேன்" என்று பேசத் தொடங்கினார் ஷீலா. தொடர்ந்து பேசிய அவர், "முதலில் விஜய்யை ஒரு மகனாகப் பார்த்தேன்.
அடுத்து ஒரு நடிகராகப் பார்த்தேன். இன்றைக்கு ஒரு தலைவராகப் பார்க்கிறோம். என்னைப் பொறுத்தவரை விஜய் எனக்குக் குழந்தைதான். சினிமாவில் படிப்படியாகக் கஷ்டப்பட்டு அவர் இந்த உயரத்திற்கு வந்தார். அந்த இடம் சாதாரணமாகக் கிடைக்கவில்லை. அதை உடனே விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அது மிகப்பெரிய துணிச்சல்.
சின்ன வயதிலிருந்து விஜய்யைப் பார்த்தவள் நான். அவ்வளவு சைலண்ட் ஆன பையன் அவர். அமைதியாக இருந்த விஜய்யை இப்படி நடிக்கிறார் என்று நான் அன்று ஆச்சரியப்பட்டேன். அதை மாதிரிதான் அவர் மேடையில் பேசுவதைக் கேட்டு வியந்து போனேன். என்ன தைரியமாகப் பேசினார். என்னால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு பார்க்கவே முடியவில்லை. அப்படிப் பேசினார். மனதில் என்னென்னவோ யோசனைகள். அவர் மக்கள் உங்களை நம்பி வந்திருக்கிறேன் என்று சொன்னபோது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.
அவரிடம் இல்லாத பணம் இல்லை. இப்போதும் அவர் உச்சத்தில் இருக்கிறார். எவ்வளவு பணம் இருந்தாலும் ஒருவரும் அதை வேண்டாம் எனச் சொல்லமாட்டார்கள். அதான் இயல்பு. ஆனால், விஜய் இன்றைக்கு அதைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களை நம்பி வந்துள்ளார். மேடையில் அவர் ராம்ப் வாக் வந்தபோது என்ன வரவேற்பு பார்த்தீர்களா? திடீரென்று யாரோ துண்டை தூக்கிப் போட்டவுடன் அதற்கு மதிப்பு அளித்து கழுத்தில் எடுத்துப் போட்டுக் கொண்டார். இதை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட முடியாது. அவரே தானாகச் செய்தது.
விஜய்யின் ஒரே தங்கை வித்யா. அவரது மரணம் இப்போது வரை விஜய் மனத்தைப் பாதித்திருக்கிறது. அதை அவர் அனிதா மரணத்தோடு சேர்த்துச் சொன்னார். வித்யா ரொம்ப சின்ன வயதிலேயே தவறிப் போனார். அதன் பின்னர் சிங்கிளாகவே வாழ்ந்தவர் விஜய். ஒரே மகனாக தனியாக வாழ்ந்தவர். அந்த வருத்தம் அவர் உள்ளத்தில் இப்போதுவரை இருக்கிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications