தமிழக முதல்வர் விஜய்.. நேரடி கண்ட்ரோலில் எடுத்த முக்கிய துறைகள்! முழு லிஸ்ட்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறைகள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதில் முதல்வர் விஜய் பொதுத்துறை, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் தொடர்பான துறைகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகத் துறைகளை தன் வசம் வைத்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றார். விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். விஜய் அமைச்சரவை பதவியேற்று கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது.

விஜய் வசம் உள்ள துறைகள்
அமைச்சரவையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது, அதிமுக அதிருப்தி அணிக்கு ஒதுக்கலமா? என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் விஜய் ஈடுபட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. விஜய் அமைச்சரவையில் இலாகா ஒதுக்கப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இன்று ஒருவழியாக இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல்வர் விஜய் பொதுத்துறை, பொது நிர்வாகம், IAS, IPS, IFS, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளைத் தன் வசம் வைத்துள்ளார்.
மகளிர், இளைஞர் நலன்
விஜய் தனது தேர்தல் பிரசாரத்தில் மகளிர் நலன் இளைஞர் நலம் உள்ளிட்ட துறைகளை தன்வசமே வைத்து இருப்பேன் எனப் பேசிவந்தார். இதனையே தற்போது முதல்வராக பதவியேற்ற பிறகு செய்துள்ளார். முக்கியமாக கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த உதயநிதியிடம் விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் ஆகிய துறைகள் மட்டுமின்றி சிறப்பு திட்ட செயலாக்கம் ஆகிய துறைகளை வைத்து இருந்தார். இந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையையும் விஜய் தனவசமே வைத்துள்ளார். விஜய் வசம் மொத்தம் 17 துறைகள் உள்ளன.
சிறப்பு திட்ட செயலாக்க துறையின் பணிகள்:
துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். அதாவது முதல்வரே பெரும்பாலும் இதை அறிவிப்பார். அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பப்பட்டது. சிறப்பு திட்டங்களை கண்காணிக்கவும் இந்த துறை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு திட்டங்களை கண்காணிக்க தனியாக ஒரு துறை தமிழ்நாட்டில்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. மற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (முதல்வர்) இணைந்து செயல்படுவார். அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பாக இத்துறையே செயல்படும்.














Click it and Unblock the Notifications