பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்க முடியாது.. மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.. விஜய் எதிர்ப்பு!
சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிந்த உடனேயே விலையை ஏற்றுவது ஏற்க முடியாது என்று கூறியுள்ள விஜய், எளிய மக்கள் இதனால் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை 5 மாநிலத் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.14 விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.11 விலை உயர்ந்துள்ளது.
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் விஜய், மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோலிய பொருட்களின் விலையை, குறிப்பாக லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3 மற்றும் டீசல் ரூ.3 என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும் போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் விலையைக் குறைப்பதில்லை. மாறாக லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருட்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக் கொள்ள கூடியதல்ல.
இந்த விலை உயர்வு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளை பயன்படுத்தும் ஏழை, எளிய நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வங்கிக் கடன் பெற்று வாகனங்களை வாடகைக் இயக்குபவர்கள் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடை பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
மேலும், இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனத்தின் வாடகை உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்ய
குறு சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு சிறு தொழில் நிறுவனங்களை பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும் பெற வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications