டென்ஷனில் விஜய்.. அனைவரும் பனையூர் வாங்க.. எம்எல்ஏக்களுடன் இன்று அவசர ஆலோசனை.. பரபரப்பு தகவல்கள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலை 9 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களை அவசர ஆலோசனைக்கு அழைத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இருப்பினும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் விசிகவிடம் தலா 2 என்று மொத்தம் 6 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதனால் அவர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார் விஜய். இவர்கள் இன்னும் தங்களின் முடிவை அறிவிக்கவில்லை. இன்று மதியத்துக்குள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவுகளை தெரிவிக்க உள்ளனர். இதனால் விஜய்க்கு ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்குமா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.
விஜய் இன்று அவசர ஆலோசனை
இந்த பரபரப்புக்கு நடுவே தான் விஜய் இன்று தனது எம்எல்ஏக்களுடன் விஜய் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தற்போது தவெக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தங்கி உள்ளனர். இந்நிலையில் தான் இன்று காலை 9 மணிக்கு பனையூர் கட்சி அலுவலகத்துக்கு அனைவரும் வர வேண்டும் என்று விஜய் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கிய மீட்டிங்
மெஜாரிட்டி இன்றி தவிக்கும் நிலையில் இந்த அவசர ஆலோசனை நடைபெற உள்ளது. இதனால் இது மிகவும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. தவெகவை பொறுத்தவரை எப்படியாவது மெஜாரிட்டியை பெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தங்களின் நிலைப்பாட்டை அறிவித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார்.
நீதிமன்றத்தை நாட...
இந்த 3 கட்சிகளின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாது. இதனால் அதிமுக, பாமகவின் தயவை விஜய் பெற வேண்டும். ஆனால் அதற்கு விஜய் இன்னும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் அடுத்தக்கட்டமாக விஜய் நீதிமன்றத்தை கூட நாடலாம். இதற்கான ஆலோசனைகளும் நடந்துள்ளன. தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி வழங்கவில்லை என்று கூறி வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
ராஜினாமா முடிவு?
இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது நடந்தால் தவெகவின் 5 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சில தவெக நிர்வாகிகள் மறுத்துள்ள நிலையில் இநத தகவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அதுபற்றியும் இன்றைய அவசர ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதா? என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications