நன்றி மறக்காத விஜய்.. விஜயகாந்த் மேல் இவ்வளவு மரியாதையா? தவெக மாநாட்டில் ஒளிந்திருக்கும் ரகசியம்!
மதுரை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என விஜய் அறிவித்ததில் இருந்து உற்சாகத்தில் இருக்கின்றனர் அக்கட்சி தொண்டர்கள். குறிப்பாக மாநாடு நடத்தும் தேதி குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அன்றைய தினம் விஜயின் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளும் ஆகஸ்ட் 25 தான் என்பதும், மாநாடு நடைபெறும் மதுரையும் விஜயகாந்தின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன. திமுகவும் அதிமுகவும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. இந்த இரு கட்சிகளுக்கு அடுத்து தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது தமிழக வெற்றி கழகம்.
நடிகராக இருந்து அரசியல் கட்சி தலைவராக உருமாறி இருக்கும் விஜய் முதன் முதலாக அரசியல் கட்சி மூலம் மக்களை சந்திக்க இருக்கிறார். கடந்தாண்டு கட்சி ஆரம்பித்தாலும் வீட்டை விட்டு வெளியேறி வருவதில்லை, ஒர்க் பிரம் ஹோம் அரசியல்வாதி என பல்வேறு விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால் நேரடியாக மக்களை சந்திப்பது தான் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை உணர்ந்த விஜய் தற்போது கள அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்தித்த நிலையில், அதற்கு பிறகு கோவை ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் சூட்டிங் ஆகியவற்றுக்கு மட்டுமே பொது வெளிக்கு வந்தார். சிவகங்கை அஜித்குமார் காவல் நிலையம் மரணம் தமிழக முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விஜய் அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
சூட்டோடு சூடாக சென்னையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தையும் விஜய் நடத்தினார். இந்த நிலையில் கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநாடு விஜயின் வட மாவட்ட செல்வாக்கை உயர்த்தி காட்டிய நிலையில், தென் மாவட்டத்திலும் தனது ரசிகர்கள் பலத்தை நிரூபிக்க விஜய் திட்டமிட்டார். அதற்கேற்றார் போல் கடந்த செயற்குழு கூட்டத்தில் மதுரையில் மாநில மாநாடு நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவின் நிலையில் திடீரென நேற்று இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது.
சிறிது நேரத்திலேயே ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய். விழுப்புரம் மாநாட்டை போலவே மிக பிரம்மாண்டமாக, ஏன் அதைவிட அதிக பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பது விஜய்யின் திட்டம். மாநாட்டுக்கு 20 லட்சம் பேரை திரட்டி வர கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட மேடை அமைப்பு, விஜய் நடப்பதற்கு 500 மீட்டர் நீளம் ராம்ப் வாக், பார்க்கிங், உணவு தயாரிப்பு கூடம், மருத்துவ உதவிகள் என ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய நிர்வாகிகளுக்கு உற்றுவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் மாநாடு நடத்தும் தேதி குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை அவரது கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர். அன்றைய தினம் விஜயின் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தான் லண்டன் வாழ் இலங்கைத் தமிழரான சங்கீதாவை விஜய் திருமணம் செய்து கொண்டார். அதைவிட முக்கியமாக அன்றைய தினம் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் என்பதும், மதுரை தான் விஜயகாந்தின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு உள்ளிட்ட படங்கள் கடுமையாக சொதப்பிய நிலையில், விஜயின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் கடும் மன உளைச்சலில் இருந்தார். அப்போது விஜயகாந்தை சந்தித்து தனது மகனின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சம்பளம் எதுவும் வாங்காமல் உடனடியாக அந்த படத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். அந்தப் படம் தான் செந்தூரப்பாண்டி.
அதற்குப் பிறகு விஜயின் கேரியர் ஏறு முகமாகத்தான் இருந்தது. அதனால் விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அதன் தொடர்ச்சியாக தான் அவரது மரணத்தின் போது கூட நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் தென் மாவட்டத்தில் தனது முதல் அரசியல் பயணத்தை விஜயகாந்தின் பிறந்தநாளில் அதுவும் அவரது சொந்த ஊரில் விஜய் தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர் அவரது கட்சியினர். மாநாட்டில் விஜயகாந்த் குறித்து பேசினால் அது அவருக்கு மேலும் பிளஸ் பாயிண்டாக அமையும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications