கரூருக்கு விஜய் போறது கன்பாஃர்ம் ஆயிருச்சு! இந்த தேதியில் தான் பயணம்! ஆறுதல் சொல்வது கூட இப்படியா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதோடு நிதி உதவி வழங்க இருக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபியிடம் அனுமதிக் கோரப்பட்ட நிலையில் கரூர் மாவட்ட காவல் துறையை அணுக உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் எப்போது கரூர் செல்கிறார் என்ற தேதி குறித்தான விபரங்கள் வெளியாகி இருக்கிறது. வரும் 17ஆம் தேதி விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கரூர் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளனர் தவெகவினர்.
கடந்த செப்டம்பர் 27, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரில் நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து, 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத துயர சம்பவமாக பதிவாகியுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு நீதிமன்றம் தலையிட்டு எஸ்ஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை விஜய் நேரில் கரூருக்கு செல்லவில்லை.

கரூர் சம்பவம்
கடந்த சில நாட்களாக அவர் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனால் சில அரசியல் கட்சிகள் விமர்சனங்களையும் முன்வைத்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் நேரில் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் தற்போது டிஜிபி அலுவலகத்தின் வழியே அதிகாரப்பூர்வ அனுமதி கோரப்பட்டுள்ளது. அக்டோபர் 8 அன்று, த.வெ.க வழக்கறிஞர் அறிவழகன் சென்று விஜய் கரூர் செல்ல அனுமதி மற்றும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோரினார்.
விஜய் வருகை
காவல்துறையால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில், விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும்போது வீடு வீடாக செல்லக்கூடாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் காயமடைந்தவர்களும் ஒரே மண்டபத்தில் வர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலிருந்து அதிகபட்சம் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ரசிகர்கள் யாரும் மண்டபத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஒலி பெருக்கி கருவிகளை பயன்படுத்தக் கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அக்டோபர் 17
அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி, விஜய் அக்டோபர் 17 அன்று கரூருக்கு சென்று மாலை 3 மணி வரை இந்த சந்திப்பை முடித்து திருச்சி விமான நிலையம் மூலம் திரும்புவார் எனவும், கரூரில் உள்ள மண்டபத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளில் இருந்து ஒரு குடும்பத்துக்கு 5 பேர் என்ற அளவில் சுமார் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்களும் 50 பேர் என 5 பேட்ச்களாக விஜயை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் செல்லும் விஜய்
ஏற்கனவே த.வெ.க.வின் அருண் ராஜ் கரூரில் தங்கி இருக்கும் நிலையில், அவர் விஜய் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கரூரில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலையில் அது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார். இப்படி கரூர் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பல பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கப் போகிறார் என்ற செய்தியை கரூரில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications