சோகம் கூட சுகமாகும்.. அரசியல் பூவே உனக்காக! 50 வருட ‘திராவிட’ குடும்ப பகை.. சேர்த்து வைக்கும் விஜய்?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் திமுக அதிமுக சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இரு பெரும் திராவிட கட்சிகள் இரு துருவங்களாக செயல்பட்டு வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி ஆரம்பித்த விஜய் மூலம் சேரும் வாய்ப்பு உருவாகி உள்ளது. பூவே உனக்காக திரைப்படத்தில் வருவது போல பிரிந்து கிடந்த திராவிடக் குடும்பத்தை அரசியலில் சேர்க்கப் போகிறார் விஜய்! என ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது மிகப்பெரிய திருப்புமுனையை சந்தித்திருக்கிறது. 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியை அமைப்பதற்கான இறுதி கட்ட முயற்சிகள் கைகொடுக்காத சூழல் நிலவுகிறது.
இதனால் "விஜய் முதல்வராக பதவியேற்பாரா?" என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு தவெக வெற்றி பெற்றது தமிழக அரசியலையே தலைகீழாக மாற்றியுள்ளது.

திமுக, அதிமுக என இரு பெரிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றியிருப்பது அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது. இதனால் தவெக தொண்டர்கள் விஜய் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என்ற உற்சாகத்தில் இருந்தனர். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தது.
அதன்பிறகு, கட்சியின் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், ஆட்சியமைக்க அழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என விஜய்யின் கோரிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறார் ஆளுநர் அர்லேகர். இதை அடுத்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் விஜய் ஈடுபட்டிருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க விஜய் குதிரை பேரும் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும், அதில் ஸ்டாலின் சொன்ன கருத்துக்களும் அரசியல் களத்தை மேலும் பரபரப்பாகி இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க போவதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கிறது.
கலைஞர் கருணாநிதி காலத்தில் அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் 1977இல் ஆட்சியை பிடித்தார். அவர் உயிரோடு இருந்த வரை அதாவது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. தொடர்ந்து அமைந்த கருணாநிதி அரசும் கலைக்கப்பட்டது. 1991ல் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். அதற்கு பிறகு இரு கட்சிகளும் மாறி மாறி ஆண்டு வருகின்றன. தமிழக அரசியல் களத்தில் இதுவரை தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொள்ளாத இரு கட்சிகள் என்றால் அது திமுகவும் அதிமுகவும் தான்.
இந்த நிலையில் விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்க திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியது அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த கட்சி இரு பெரும் திராவிட கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவதை அந்த கட்சி தலைவர்களே விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இருவரும் சேரும் முடிவுக்கும் வர வாய்ப்புள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை வைத்து ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தில் வருவது போல அரசியலில் இரு குடும்பங்களையும் இணைக்க போகிறார் என்கின்றனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த படம் பூவே உனக்காக. விஜயின் சினிமா கேரியரை மாற்றிய படம் என்று கூட சொல்லலாம். தற்போது இருக்கும் விஜய் ரசிகர்கள் பலருக்கும் பூவே உனக்காக படத்தை பற்றி தெரியாது.
சென்னையில் ஒரு இளம் பெண்ணை காதலிக்கும் இளைஞன் அவரிடம் காதலை சொல்ல வரும்போது அவர் வேறு ஒருவரை காதலிப்பது தெரியவரும். ஆனால் கிராமத்தில் இருக்கும் அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் எதிரிகள் என்பதால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதை அடுத்து அந்த குடும்பத்தின் பேரனாக செல்லும் விஜய் என் குடும்பங்களையும் சேர்த்து வைப்பார். தனது காதலியை அவரது காதலுடன் சேர்த்து வைத்துவிட்டு தனக்கு காதல் வேண்டாம் என கிளைமாக்ஸ்-ல் சொல்லிவிட்டு சென்று விடுவார்.
சோகம் கூட சுகமாகும் என்ற பாடலோடு அந்த கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து கண்ணீர் விடாதவர்கள் இருக்க முடியாது. தற்போது அரசியலிலும் அது நிகழப் போகிறது. திடீரென புரட்சியை ஏற்படுத்திய விஜய் தற்போது இருவரும் திராவிட கட்சிகளை சேர்த்து வைத்துவிட்டு ஒதுங்கி சொல்வாரா? அல்லது அதனை முறியடித்து தானே முதல்வராக பதவி ஏற்பாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications