பாஜகவுடன் கூட்டணியா? அதிகமா பேசிட்டாங்க.. இப்தார் விருந்தில் பங்கேற்கும் விஜய்.. எந்த இடம் தெரியுமா!
சென்னை: நாளை மறுநாள் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாஜக உடன் கூட்டணி பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில், நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் தவெக சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதன் மூலமாக விஜய் பல்வேறு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று நம்புவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே பாஜக உடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. டெல்லி பாஜக மேலிடம் தரப்பில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி மூலமாக விஜய்யை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் விஜய்யின் டிமாண்ட் மிகப்பெரிதாக இருப்பதால், அதனை சமாளிக்க முடியவில்லை. இரு கட்சிகளில் எந்தக் கட்சி இறங்கி வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனாலும் பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தவெக நடத்துகிறது என்ற தகவலே, களத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுபான்மை மக்களின் வாக்குகளில் மிகப்பெரிய சேதாரம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் விஜய் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். முதலில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் ரசிகர்களுக்கு கை காட்டியபடி வெளியில் வந்தார்.
அதேபோல் இன்று தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தவெக யாருடனும் கூட்டணி பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இன்னொரு பக்கம் செங்கோட்டையன் மூலமாகவும் செய்தியாளர்களிடம் பேச வைத்திருக்கிறார். அந்த வகையில் அடுத்ததாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க உள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு விஜய் பங்கேற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. அங்கு எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக பலரும் கூடிவிட்டதால், பல்வேறு சிக்கல் எழுந்தது. இதனால் இம்முறை தவெக சார்பாக நடக்கும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடக்கவுள்ளது. இதில் விஜய் பங்கேற்றாலும், பெரிதாக அரசியல் எதுவும் பேசப் போவதில்லை என்கின்றனர்.
எந்த சிக்கலாக இருந்தாலும், நாங்கள் துணை நிற்போம் என்று ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே விஜய் பேசுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு தவெக தரப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலமாக பாஜக உடன் கூட்டணி உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications