12 மணி நேரமாகியும் குற்றச்சாட்டுக்கு வாய் திறக்காத விஜய்.. ஒரிஜினல் லெட்டரையும் வெளியிடவில்லை!
சென்னை: தவெக மீது அமமுக குதிரை பேர குற்றச்சாட்டை முன் வைத்து 12 மணி நேரமாகியும், விஜய் தரப்பில் இருந்தோ அல்லது தவெக தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. டிடிவி தினகரன் நேரடியாகவே தவெக வெளியிட்ட காமராஜின் வீடியோவை ஏஐ என்று குற்றம்சாட்டியுள்ள நிலையில், காமராஜ் கொடுத்த ஒரிஜினல் கடிதம் எங்கே என்ற கேள்விக்கும் தவெக பதில் அளிக்கவில்லை.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி இருக்கிறது. ஆனாலும் ஆளுநர் ராஜேந்திர கர்லேகர் பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டினால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இதனிடையே நேற்று இரவு ஆளுநரை 3வது முறையாக விஜய் சந்தித்திருந்தார்.

அப்போது தவெக தரப்பில் பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது விஜய் சார்பாக கொடுக்கப்பட்ட கடிதங்களில் அமமுக எம்எல்ஏ காமராஜ் அளித்த ஆதரவு கடிதமும் இருந்திருக்கிறது. காமராஜ் கொடுத்த கடிதத்தின் நகலை தவெக ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கிறது. ஆனால் டிடிவி தினகரன், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமல்லாமல் ஆளுநரை சந்தித்து டிடிவி தினகரன் புகார் அளித்திருந்தார். இது தவெகவுக்கு புதிய சிக்கலை உருவாக்கி இருக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஒப்புதல் இல்லாமல், அக்கட்சியின் எம்எல்ஏ காமராஜிடம் ஆதரவு கடிதம் பெற்றது எப்படி என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதன்பின் தவெக தரப்பில் எம்எல்ஏ காமராஜ் கடிதத்தில் கையெழுத்திடும் வீடியோ வெளியிடப்பட்டது.
இது தவெகவுக்கு பின்னடைவாக மாறியது. இந்த வீடியோவை எடுத்தது யார்? எங்கு வைத்து கையெழுத்து வாங்கப்பட்டது? தவெக எப்படி காமராஜிடம் ஆதரவு பெற்றது என்ற கேள்விகளை எழுப்பியது. இன்னொரு பக்கம் என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் ஆதரவு பெற கூடாது என்ற கம்யூனிஸ்ட்களின் நிபந்தனையையும் தவெக காற்றில் விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் அரங்கேறி சுமார் 12 மணிக்கு நேரத்திற்கு மேலாகியும், இதுவரை தவெக தரப்பில் இருந்து எந்தவிதமான விளக்கமும் வெளியிடப்படவில்லை. அதேபோல் விஜய்யும் வழக்கம் போல் அமைதியாக வாய் மூடி இருக்கிறார். அமமுகவின் ஆதரவு இல்லாத போது, எதன் அடிப்படையில் ஆளுநரிடம் எம்எல்ஏ காமராஜ் அளித்த கடிதத்தின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது என்பதற்கு தவெக விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications