விஜய்க்கு எதிராக புது வழக்கு.. சங்கீதாவுக்கு கொடுத்த கடன் ரூ.12.6 கோடி என்ன மேட்டர்? இன்று விசாரணை
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியதாக விஜய் குறிப்பிட்டிருப்பதன் உண்மைத்தன்மை குறித்து வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும் எனச் சென்னை வெங்கடேஷ் என்பவர் மனு அளித்துள்ளார். இந்தப் புதிய மனு இன்று (ஏப்ரல் 27) விசாரணைக்கு வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மேலும், தேர்தலில் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 85.15% வாக்குப்பதிவு நடந்துள்ளது. வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவரங்களில் தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலின் நம்பகத்தன்மை, அதன் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விளக்கம் தேவை எனக் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தை வருமான வரித்துறை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது, பெரம்பூர் தொகுதி வாக்காளாராக அங்கு போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை தனக்கு உள்ளது. வேட்பாளர்கள் உண்மையான தகவல்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
வேட்பாளர்கள் Form 26-ல் வழங்க வேண்டிய தகவல்கள் முக்கியமான அரசியல் சட்டப் பொறுப்பாகும். முக்கிய விவரங்களை மறைத்தல், ஒளித்தல், தவறாக குறிப்பிடுதல் அல்லது மாற்றம் செய்தல் ஆகியவை தேர்தல் நடைமுறையில் மோசடியான செயலாக கருதப்படும். விஜய் தன்னை நேர்மையானவராகவும், வெளிப்படையானவராகவும் காட்டிக்கொள்கிறார். ஆனால், விஜய் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்கமான நிறுவனங்களுடன் பெரும் தொகை கடனாக வழங்கியுள்ளதாக தனது வேட்பு மனுவில் கூறியுள்ளார். இது பொதுமக்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கப்பட்டதாக கூறியிருப்பது, சமீபத்திய பிரச்சனைகளுக்கு மத்தியில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இத்தகைய பரிவர்த்தனைகளின் உண்மைத்தன்மை, நோக்கம் மற்றும் தன்மை குறித்து நியாயமான கேள்விகள் எழுகின்றன. எனவே இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளைக்கு ரூ. 20 கோடி பரிமாற்றம் உள்ளிட்ட பிற உயர் மதிப்பு பரிவர்த்தனைகளுக்கும் போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய குறிப்பிடத்தக்க நிதிப் பரிவர்த்தனைகள் இருந்தபோதிலும், விஜய் தனக்கு எந்தக் கடன்களும் இல்லை என்று அறிவித்துள்ளார் என்றும், இது அவரது நிதி நிலையைப் பற்றிய முழுமையற்ற அல்லது தவறான சித்தரிப்பாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 27) விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளதுடன், முன்னதாகத் தாக்கல் செய்யப்பட்ட இதேபோன்ற ஒரு மனுவையும் ஏற்கெனவே ஆய்வு செய்து வருகிறது. அந்த வழக்கில், வருமான வரித் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, அதற்கான பதில் வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications