“அதிமுகவை சேர்த்துக்கலாம்”.. விஜய்க்கு அட்வைஸ் தந்த சீனியர்.. நாளை மேஜர் முடிவு?
சென்னை: தவெகவுக்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கு பெற தீவிரமாக முயல்கிறது எஸ்.பி வேலுமணி தரப்பு. வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளை நம்புவதை விட, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவது ஆரோக்கியமானதாக இருக்கும். இல்லையெனில், நிம்மதியாக நாம் ஆட்சி நடத்த முடியாது என அமைச்சர்கள் முதல்வர் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கின்றனராம்.
அதிமுகவில் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சகட்டத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தை வீழ்த்தி அவரிடமிருந்து அதிமுகவை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம். இவரது தலைமையில் தொடர்ச்சியாக 34 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி ஆலோசனை நடத்தி தவெகவுக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுத்தனர்.

நேற்று 10 ஆம் தேதி நடந்த ஆலோசனையில், தவெகவுடன் கூட்டணி வைக்கிறோம். ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கையில் 50 சதவீதம் குறைத்துக் கொள்கிறோம். முக்கிய தலைவர்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என விஜய்யிடம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, அன்பழகன், டாக்டர் விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் ஆகிய ஐவருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என செங்கோட்டையன் மூலமாக கேட்கப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் விஜய் தரப்பில் பரிசீலித்து வருகின்றனர். 12 ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் இதில் ஒரு முடிவை சொல்ல வேண்டும் என செங்கோட்டையனிடம் தெரிவித்திருக்கிறார் எஸ்பி வேலுமணி. அதற்கு செங்கோட்டையன், இது குறித்து முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசிக்கிறார். எங்களின் கருத்துகளையும் கேட்டறிந்திருக்கிறார். நாங்கள் பாசிட்டிவ்வாகத் தான் சொல்லியிருக்கிறோம் என்று கூறியுள்ளார் செங்கோட்டையன்.
வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளை நம்புவதை விட, அதிமுகவின் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவது ஆரோக்கியமானதாக இருக்கும். இல்லையெனில், நிம்மதியாக நாம் ஆட்சி நடத்த முடியாது. அதனால் அதிமுக ஆதரவை பெறுவதில் தீர்க்கமான முடிவை எடுங்கள் என்று முதல்வர் விஜய்யிடம் அழுத்தம் தந்துள்ளனாராம் தவெக அமைச்சர்கள் சிலர்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications