Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்!
சென்னை: தமிழ்நாடு குறித்தும், தமிழ்நாட்டு மக்கள் குறித்தும் தெரியாமல் விஜய் கனவுலகில் வாழ்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். விஜய் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளை மட்டுமே வாங்குவார் என்று கூறிய பியூஷ் கோயல், தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அந்த தொகுதிகள் எவை என்ற அறிவிப்பும் வெளியாகிவிட்டது. அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட சூழலில், பாஜக இன்னும் வேட்பாளர்கள் அறிவிப்பை தாமதம் செய்து வருகிறது.

குறிப்பாக அண்ணாமலை போட்டியிட ஏதுவான தொகுதிகள் ஒதுக்கப்படாததால், அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை வடக்கு தொகுதியில் வானது சீனிவாசன் போட்டியிடுவாரா அல்லது அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
சென்னை வந்த அவரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பியூஷ் கோயல் பேசுகையில், தமிழ்நாடு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை மக்கள் மீண்டும் கொண்டு வர நினைக்கிறார்கள். என்டிஏ கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. நிச்சயமாக திமுகவை வீழ்த்துவோம். பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும்.
ஊழல் கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் ஒன்று சேர்ந்துள்ளன. அதேபோல் தமிழ்நாட்டு மக்கள் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் எதுவும் தெரியாமல் விஜய் பேசி வருகிறார். அவர் ஒரு கனவுலகில்; வாழ்கிறார். குறிப்பிட்ட அளவிலான வாக்குகளை மட்டுமே விஜய்யால் பெற முடியும், அண்மலையில் விஜயகாந்த், கமல்ஹாசனுக்கு கூட 2, 3 தொகுதிகளே கிடைத்தன. அந்த நிலை தான் விஜய்க்கும் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக இன்னும் ஓரிரு நாட்களாகும் என்றும் கூறியுள்ளார். இதனால் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக பியூஷ் கோயல் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. அதேபோல் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications