விஜய் வசந்துக்கு ரூட் கிளியர்! கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ்! கிரீன் சிக்னல் கொடுத்த திமுக!
சென்னை: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட திமுக கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான விஜய் வசந்தே மீண்டும் அங்கு களம் காண்பது உறுதியாகியுள்ளது.
திமுக தொகுதி பங்கீட்டு குழு அழைப்பின் பேரில் கடந்த வாரம் பேச்சுவார்த்தைக்கு சென்ற காங்கிரஸ் டீம், தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் 15 தொகுதிகளின் பட்டியலை கொடுத்தது. அதில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்று. இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் யாரும் பெரியளவில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. குமரி மாவட்ட திமுகவில் நிலவும் உட்கட்சி பனிப்போர் காரணமாக காங்கிரஸ் கட்சியே போட்டியிடட்டும் என்ற மனநிலைக்கு லோக்கல் திமுக நிர்வாகிகள் வந்துவிட்டனர்.

அதுமட்டுமல்ல விஜய் வசந்த் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பினும் கட்சி பேதமின்றி யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும் என்ற சூழல் உள்ளது. கோடிக்கணக்கில் சொத்து, தமிழகமெங்கும் தொழில் சாம்ராஜ்யம், என்ற பல பெருமைகள் இருப்பினும் அதனை எந்த இடத்திலும் வெளிக்காட்டாமல் எளிமையான எம்.பி.யாக வலம் வருவது விஜய் வசந்துக்கு ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
மறைந்த வசந்தகுமார் மீது ராகுலும், சோனியாவும் மிகப் பெரிய அளவில் நன்மதிப்பு வைத்திருப்பதால் காங்கிரஸ் சார்பில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் தான் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. திமுக கங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லாமல் சுமூகமாக முடிந்த தொகுதி கன்னியாகுமரி தொகுதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை, ஆரணி, திருச்சி, கரூர் ஆகிய 4 தொகுதிகளும் கடும் இழுபறியாக உள்ளது.
விஜய் வசந்தை எதிர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக, அதிமுக, நாம் தமிழர் என மூன்று கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் களம் காணக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்.ராதாகிருஷ்ணன், பெண் கவுன்சிலர் மீனா தேவ் உள்ளிட்ட பலர் பாஜக சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டும் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications