கட்சிக்காக கணக்கு பார்க்காத விஜய் வசந்த் எம்.பி.! பெருமைப்படுத்திய சத்தியமூர்த்தி பவன்!
சென்னை: காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து மறைந்த வசந்த்குமாரின் மகனும் கன்னியாகுமரி எம்.பியுமான விஜய் வசந்த் கட்சிக்காக செலவழிப்பதில் கணக்கு பார்ப்பதில்லையாம்.
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவி, மாநில தலைவர் பதவிகளை வகித்த பலர் ராகுல் நிகழ்ச்சிக்கு கணக்கு பார்த்து ஒதுங்கி நின்ற நிலையில், விஜய் வசந்த் எம்.பி. செலவுத்தொகையில் பெரும் பகுதியை தாமே ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே சத்தியமூர்த்தி பவனில் விழா மேடையில் வைத்தே விஜய் வசந்தின் தாராள குணத்தை சுட்டிக்காட்டி பெருமைப்படுத்திய நிகழ்வும் நடந்தது.

ராகுல் நிகழ்ச்சி
கடந்த 28-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுய சரிதை நூலான உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தை வெளியிடுவதற்காக சென்னை வந்த ராகுல்காந்தி, அன்றைய தினம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான செலவுத்தொகையை கட்சியே கவனித்துக்கொண்டாலும் விஜய் வசந்த் எம்.பி. ஒரு குறிப்பிட்ட தொகை வரை செலவுப் பொறுப்பை தாமே முன்வந்து ஏற்றுக்கொண்டாராம்.

ஆவணப் படம்
மேலும், ராகுல் வரும் வரை கூட்டத்தை கலையவிடாமல் அமர வைக்க ஆவணப்படம் தயாரித்தது, முழுமையாக விழாவை படம்பிடிக்க சென்னையின் பிரபல ஒளிப்பதிவு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்துகொடுத்தது, உள்ளிட்ட இன்னும் பல விவகாரங்களை விஜய் வசந்த் எம்.பி.யே கவனித்துக் கொண்டாராம். இவ்வளவு செய்தும் ஆர்பாட்டமின்றி விழா மேடையின் ஒரு ஓரத்தில் நின்று ராகுல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார் விஜய் வசந்த்.

விஜய் வசந்த்
இதனிடையே காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்களும், இதற்கு முன்னாள் மாநிலத் தலைவர்களாக இருந்தவர்களும் கட்சிக்காக செலவு செய்யும் விவகாரத்தில் மிகுந்த கணக்கு பார்த்ததால், அவர்களிடம் ஒரு பைசா கூட கேட்கக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி. இதனிடையே ராகுல் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பேசிய பொன்.கிருஷ்ணமூர்த்தி, விஜய் வசந்த் எம்.பி.யின் பெயரை மட்டும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துப் பேசி அவரை பெருமைப்படுத்திய நிகழ்வும் நடந்தது.

பொருளாதார ரீதியாக
ராகுல் காந்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு பொருளாதார ரீதியாக விஜய் வசந்த் எம்.பி பக்க பலமாக நின்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்களில் ஒருவரான செங்கம் குமார் என்பவர், தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து விழாவில் பங்கேற்க வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications