உதயநிதி ஸ்டாலினை குறி வைத்து.. இறங்கியடிக்கும் விஜய்.. அறிக்கையை கவனித்தீர்களா?
சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில், போகிற போக்கில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைப் பெயர் சொல்லாமல் தாக்கியுள்ளார். இருவருக்கும் இடையே சமீப காலமாக நடந்து வரும், மறைமுக வார்த்தைப் போரின் புது எபிசோடாக இது, பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பிரதமர் மோடியுடன் பேசிய வீடியோ, போட்டோக்கள் வெளியான நிலையில், விஜய் தனது அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக குடும்பத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளபடி, "முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் தான் இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து டெல்லி சென்று பிரதமரையும் வேறு தனியாகச் சந்தித்தார்" என்று தெரிவித்துள்ளார்.

திமுக-பாஜக மறைமுக கூட்டணி
"திமுக குடும்பத்தின் சுயநலத்துக்காக தமிழகத்தை அடகு வைத்து பாஜகவிடம் திமுக அடைக்கலம் புகுந்துள்ளது" என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். "ரூ.1000 கோடி ஊழல் விவகாரத்தில் தமக்கு பிரச்சினை வருமோ என பயந்து முதல்வர் டெல்லிக்கு சென்றுள்ளார்" என்று அவர் தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறையின் சோதனைகள் மற்றும் வழக்குகள் தொடர்பாக ஸ்டாலின் பிரதமரிடம் பேசியிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலைப்பாட்டின் தொடர்ச்சி
இந்த அறிக்கை விஜயின் முந்தைய அரசியல் நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகும். அவர் முன்னர் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் "மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி" என்றும், "ஒன்றியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி" என்றும் அறிவித்திருந்தார்.
வயது ரீதியாகவும், திரையுலகில் இருந்து வந்தவர்கள் என்பதாலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் எப்போதும் ஒப்பீடு செய்யப்படுவார்கள். அதற்கேற்ப அவர்களிடையே பனிப்போர் நடந்தபடியே உள்ளது.
இன்றைய அறிக்கையில் விஜய் நேரடியாக உதயநிதியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், திமுக குடும்பம் மற்றும் அதன் "சுயநல" அரசியல் மீதான அவரது விமர்சனம் உதயநிதியையும் உள்ளடக்கியதாகவே கருதப்படுகிறது. மேலும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு ஸ்டாலின் சென்றது, மாநிலத்திற்கு நிதி பெற இல்லை. தன்னுடைய குடும்ப வாரிசு நிதியை காப்பாற்றவே என்று விஜய் தெரிவித்துள்ளார். குடும்ப வாரிசு நிதி என்றால் உதயநிதிதான் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விஷயம்தானே.
வாரிசு அரசியல்
கடந்த வருடம் அக்டோபர் 27ம் தேதி விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பெரியாரின் கொள்கைகளை பிரித்து விளக்கியபோதே, உதயநிதியை மறைமுகமாக குறிவைத்தார். பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கைகளை ஏற்றுக்கொண்டாலும், கடவுள் மறுப்பு நிலைப்பாட்டை தவெக ஏற்காது என்றார் விஜய். இது உதயநிதியின் சனாதன தர்ம எதிர்ப்பு கருத்துகளுக்கு நேரெதிரான நிலைப்பாடாக கருதப்பட்டது.
விஜய் திமுகவை தனது "அரசியல் எதிரி" என்று அறிவித்ததோடு, "ஊழல்" மற்றும் "வாரிசு அரசியல்" செய்வதாக விமர்சித்தார். இது திமுக வாரிசு அரசியலில் உதயநிதியின் நிலையை மறைமுகமாக குறிவைத்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதினர்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா
விஜய், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, "முடியாட்சி" மற்றும் "வாரிசு அரசியல்" குறித்து கடுமையாக விமர்சித்தார். "ஒரு முதலமைச்சர் பிறப்பால் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது" என்ற கருத்தையும் வெளிப்படுத்தினர்.
இதற்கு பதிலடியாக உதயநிதி ஸ்டாலின் விஜயின் நிகழ்ச்சியை "சினிமா செய்தி" என்று குறிப்பிட்டார். "நான் சினிமா செய்திகளைப் பார்ப்பதில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கிண்டலாக தெரிவித்தார்.

அரசியல் மோதலின் தொடர்ச்சி
விஜயின் அரசியல் நுழைவுக்கு முன்பே, அக்டோபர் 1 அன்று உதயநிதி விஜயை "நீண்டகால நண்பர்" என்று குறிப்பிட்டிருந்தார். "விஜய் என் குழந்தைப் பருவத்திலிருந்தே தெரிந்தவர். என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் அவர் நடித்தார்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் விஜயின் அரசியல் பேச்சுக்குப் பிறகு, நவம்பர் 6, 2024 அன்று உதயநிதி மறைமுகமாக எச்சரித்தார்: "2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களை எதிர்க்க யார் வேண்டுமானாலும் வரலாம், எந்த கூட்டணி அமைத்தாலும், திமுக தான் வெற்றி பெறும்" என்று கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
தொடர் தாக்குதல்
விஜய், உதயநிதியை நேரடியாக பெயர் சொல்லி தாக்கவில்லை என்றாலும், அவரது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் மற்றும் இன்றைய அறிக்கையில், அவர் குறிப்பிட்ட நிதி என்ற வார்த்தை, உதயநிதியை மறைமுகமாக குறிவைத்தவையாக கருதப்படுகின்றன. இதற்கு உதயநிதி என்ன எதிர்வினையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications