எதிர்பார்த்தபடி ரிசல்ட் வாங்கிய தமிழகத்தின் இரண்டே கட்சிகள் இவைதான்! அடடே இவங்களா? ரொம்ப சீனியராச்சே
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுகவுக்கு பாடம் கற்பிக்கிறேன் என சசிகலாவும், பாமகவை தோற்கடிக்கிறேன் என கிளம்பிய ராமதாஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக பாமக போட்டியிட்ட தொகுதிகளில் ராமதாஸ் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் நான்காம் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தேர்தலில் நிச்சயமாக ஜெயிக்க மாட்டோம் என போட்டியிட்டது இந்த இரு கட்சிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய சசிகலா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். மறுபுறம், பாமகவில் அன்புமணி ராமதாஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ராமதாஸ் தனி அணியை உருவாக்கியிருப்பதும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல முனைப் போட்டி நிலவியது. இந்த சூழலில் சசிகலா-ராமதாஸ் கூட்டணி நேரடியாக வெற்றியை எதிர் நோக்காமல், குறிப்பிட்ட சமூக வாக்குகளைப் பிரிக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் தேவர் சமூகத்தை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டார். இந்த சமூகத்தினர் முன்பு அதிமுகவுக்கு முக்கிய ஆதரவாக இருந்தவர்கள் என்பதால், அந்த வாக்குகள் பிளவுபட்டால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மகன் அன்புமணியால் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ராமதாஸும் சசிகலாவுடன் கூட்டணி சேர்ந்தார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தினார். அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்து சசிகலாவும், வன்னியர் வாக்குகளை குறி வைத்து ராமதாஸ் போட்டியிட்ட நிலையில் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. விஜய் புயல் அடித்து வரும் நிலையில் தமிழகத்தின் மிக மூத்த சீனியர்கள் தற்போது அடையாளம் இல்லாமல் போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications