அரசியல் கட்சியாக அவதாரமெடுக்கும் விஜய் மக்கள் இயக்கம்! பிப்.4ல் மாவட்ட தலைவர்களை சந்திக்கும் விஜய்!
சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களை வரும் 4ஆம் தேதி அன்று சென்னையில் சந்தித்து பேசுகிறார் நடிகர் விஜய்.
இந்தச் சந்திப்பின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஆலோசனைக் கூட்டம் போல் இல்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை விஜய் எடுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக எப்போது வேண்டுமானாலும் அவதாரம் எடுக்கலாம் எனத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கட்சியை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் விஜய் இறங்கியிருப்பதாக தெரிகிறது. இந்தச் சூழலில் மாவட்டத் தலைவர்களை சென்னைக்கு அழைத்துள்ள விஜய், சில விஷயங்கள் பற்றி ஓபனாக பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் திமுக, அதிமுக, வேட்பாளர்களுக்கே கடும் டஃப் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.இத்தனைக்கும் நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு கூட செல்லவில்லை, அதேபோல் இப்போது அரசியலில் காட்டும் ஆர்வத்தை கூட 2 ஆண்டுகளுக்கு முன்னர் காட்டவில்லை. இருப்பினும் விஜய் படத்தையும் கொடியையும் பயன்படுத்தி வெற்றியை சாத்தியப்படுத்தினர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
2 நாட்களுக்கு முன்னர் தான், ''வேகமெடுக்கும் விஜய் மக்கள் இயக்கம்'' என்ற தலைப்பில் ஒன் இந்தியா தமிழில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். நாம் சொன்னது போலவே மாவட்ட தலைவர்கள் சந்திப்பு, கட்சிப் பதிவு நடவடிக்கை, கட்சி பெயர் தேர்வு, உள்ளிட்ட விவகாரங்களில் விஜய் தீவிர ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளார். இதனிடையே விஜய் மக்கள் இயக்கத்தின் நடவடிக்கைகளையும், விஜயின் அரசியல் நகர்வுகளையும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மிகவும் கூர்மையாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications