"விஜய் விரைவில் வெளியே வந்து பேசுவார்.. நிச்சயமா அது எழுச்சியான பேச்சா இருக்கும்”.. ராஜ்மோகன் உறுதி!
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் போராட்ட வடிவம் என்பது காணொளி வெளியிடுவதன் மூலமும் இருக்கும். விரைவில் அவர் வெளியே வந்து பேசுவார், நிச்சயமாக அது எழுச்சியான பேச்சாக இருக்கும் என தவெக நிர்வாகி ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்து கொள்ளாதது பற்றிய கேள்விக்கு ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன், "எஸ்ஐஆர் தொடர்பாக தவெக சார்பில் மலைக்கோட்டை மாநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் செங்கோட்டைக்கும் ஜார்ஜ் கோட்டைக்கும் கேட்க கூடிய அளவில் மிக எழுச்சியாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் த.வெ.க நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தொண்டர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
த.வெ.க தலைவர் விஜய் மேற்கொள்ளும் மக்கள் சந்திப்பு இயக்கம் விரைவில் மீண்டும் தொடங்கும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு அது நடத்தப்படும். த.வெ க தலைவர் விஜய்யின் போராட்ட வடிவம் என்பது காணொளி வெளியிடுவதன் மூலமும் இருக்கும். நேற்று எஸ்ஐஆர் தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளிகள்தான் எஸ்ஐஆர் இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். வாக்குரிமை காக்கும் இந்த விவகாரத்தில் த.வெ.க தலைவர் விஜய்யால் முடிந்த விஷயங்களை அவர் ஆலோசனைப்படி நாங்கள் செய்து வருகிறோம். எஸ் ஐ ஆர் என்பது வாக்குரிமையை பறிக்கக்கூடிய விவகாரமாக இருக்கிறது. இதில் மத்திய அரசுக்கு மாநில அரசும் ஆதரவாக இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் காணொளி வெளியிட்டுள்ளார். விரைவில் அவர் வெளியே வந்து பேசுவார், நிச்சயமாக அது எழுச்சியான பேச்சாக இருக்கும். பிரசாந்த் கிஷோரின் நிலை விஜய்க்கு ஏற்படும் என்கிறார்கள், ஆனால் 2026இல் யாருக்கு அந்த நிலை ஏற்படப்போகிறது என்பது தெரியவரும்.
கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்வதில் திமுகவின் ஆதிக்கம் 100% உள்ளது. இந்த விவகாரத்தில் அநீதிக்கு துணை போகக்கூடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்ஐஆர் படிவம் விநியோகம் செய்யும்போது திமுகவை தவிர மாற்றுக் கட்சியினர் வந்தால் அவர்களுக்கு படிவங்களை கொடுக்காமல் அதிகாரிகள் மோசமாக நடந்து கொள்கிறார்கள். கட்சி வேறுபாடுகளை கடந்து வெளிப்படையாக என தேர்தல் நடத்துவதற்கு அனைத்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications