எல்லாமே விஜயகாந்துக்காக தான்.. இரவில் ரோட்டில் படுத்து தூங்கிய ரசிகர்கள்.. உருகவைத்த தொண்டர்கள்
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்னை சென்ற அவரது கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் சாலையில் படுத்து தூங்கிய போட்டோக்கள் வெளியாக அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் என்ற பிம்பத்தை உடைத்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தான் பெரிய ஸ்டாராக இருந்தாலும் கூட கடைநிலை பணியாளர் வரை அனைவரிடமும் அன்பாக பழகியவர். அதோடு சூட்டிங் ஸ்பாட்டில் தான் சாப்பிடும் உணவையே அனைவருக்கும் பரிமாற வேண்டும் என கட்டளையிட்டு எல்லோருக்கும் வயிறாக உணவளித்தவர்.
மேலும் பணக்கஷ்டத்தில் கலங்கி வந்த பல கலைஞர்களுக்கு ஓடிஓடி உதவி செய்த விஜயகாந்த் தனது எதார்த்தமான நடிப்பாலும், அதிரடியான ஆக்சன் காட்சிகளாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டி தொட்டி எங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

திரைத்துறையில் சாதித்த உச்சத்தில் இருந்த விஜயகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா எனும் இரு பெரும் அரசியல் ஆளுமைகள் இருக்கும்போதே துணிச்சலாக தேமுதிக கட்சியை தொடங்கி அவர்களுக்கு எதிராக களமாடினார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் உயர்ந்தார். அதன்பிறகு உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகில் ஓய்வில் இருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் காலமானார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள், தொண்டர்கள் சென்னை சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரம் ஆக ஆக மக்களின் கூட்டம் அதிகரித்தது.
மேலும் நாளைய தினம் இன்னும் அதிகமானவர்கள் வரலாம் என்பதால் சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது. இன்று காலை 4 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் இருந்து அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு அவரது உடல் மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தான் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு நேற்று காலையில் சென்னை வந்த கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் தேமுதிக அலுவலகத்தின் முன்பு காத்து நின்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமானவர்கள் நாளைய தினம் நடக்கும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக அங்கேயே காத்து கிடக்கின்றனர். இப்படி காத்து இருப்போர் கால் வலி தாங்காமல் மனம் கவர்ந்த விஜயகாந்துக்காக 100 அடி சாலையில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றனர். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வெளியாக வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications