விஜயகாந்த் வீட்டுல விசேஷம் போல.. கோயம்பேடு ஆபீஸ்ல ரெடியான "பிரபலங்கள்".. டிட்டோ திமுக.. தேமுதிக குஷி
சென்னை: விஜயகாந்த்தின் தேமுதிகவில், புது புது மாறுதல்கள் விரைவில் நடக்க போவதாக தெரிகிறது.. இதுகுறித்த சில தகவல்களும் கசிந்து வருகின்றன. இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேமுதிகவில் ஏற்படக்கூடிய நிர்வாக மாற்றங்கள் குறித்து சில விஷயங்கள் கசிந்தன.. அதாவது, தேமுதிகவில் "புதிய பதவிகள்" குறித்து, விஜயகாந்த் குடும்பத்தினரிடையே ஒரு மீட்டிங் நடந்திருக்கிறது.
இதில் விஜயகாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகளிகள், கேப்டன் குடும்பத்துக்கு விசுவாசமான ஒருசிலர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்..

ஆலோசனை கூட்டம்: அந்த ஆலோசனை கூட்டத்தில், "கட்சிக்கு புதிய தலைவரை உடனே நியமித்துவிட வேண்டும், இளைஞரணிக்கு விஜய பிரபாகரனை செயலாளராக நியமித்து, தமிழகம் முழுவதும் அவரை ஒரு ரவுண்டு அடிக்க வைத்தால், கட்சி தொண்டர்கள் உற்சாகமாவார்கள் என்று ஆலோசிக்கப்பட்டதாம்.
பிறகு, பொதுக்குழு மூலம் பிரேமலதாவுக்கு "செயல் தலைவர்" பதவியை தந்துவிட்டு, அவர் தற்போது வகித்து வரும் "பொருளாளர்" பதவியை எல்.கே.சுதீஷ் வசம் கொடுத்துவிடலாம் என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
தலைமைக்கழகம்: ஆனால், தேர்தல் பணிகள் துவங்கி விட்டால், அறிக்கைகள், அறிவிப்புகள், உத்தரவுகள் என பல்வேறு விஷயங்கள் தலைமைக்கழகத்தில் இருந்து தரப்பட வேண்டும். அதில் "பொதுச்செயலாளர்" என்கிற வகையில் கேப்டன் தான் இப்போதுவரை கையெழுத்து போட்டு வருகிறார். இனிமேல், கேப்டனின் பெயரில் அறிக்கைகளோ, அறிவிப்புகளோ, உத்தரவுகளோ வந்தால், நம் கட்சிக்காரர்கள் கூட அதை நம்ப மாட்டார்கள். பொதுவெளியில் கட்சியின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படும்.
அதனால், கட்சியின் "பொதுச்செயலாளர்" பொறுப்பினை பிரேமலதா ஏற்றுக்கொண்டு, கட்சியின் "நிறுவன தலைவராக" மட்டுமே கேப்டன் இருக்கட்டும். கட்சித்தலைவராக விஜயகாந்த் இருப்பதைவிட, நிறுவனத்தலைவராக இருப்பதே மிக பொருத்தமாக இருக்கும். தேமுதிக காலம்வரை, நிறுவனத்தலைவர் பதவி கூடவே வரும்" என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
செயல் தலைவர்: அந்தவகையில் தேமுதிகவின் கட்சி தலைவராக பிரேமலதா பொறுப்பேற்பாரா? அல்லது செயல் தலைவராக பொறுப்பேற்பாரா? அல்லது பொதுச்செயலாளராக பொறுப்பேற்பாரா? என்ற பல எதிர்பார்ப்புகள் எழுந்தபடியே இருந்தன..
முக்கியமாக, திமுக பாணியிலேயே "செயல் தலைவர்" பதவி தேமுதிகவிலும் உருவாக போவதாக செய்திகள் பரவியதால் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கருணாநிதி: மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியவில்லை.. அப்போது, ஸ்டாலின்தான், செயல் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்.. கட்சியில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளுமே, அப்போது ஸ்டாலின் ஒப்புதல் பேரில்தான் நடந்தது.. அதுபோலவே, திமுகவுக்கு அடுத்தபடியாக தேமுதிகவும், செயல் தலைவர் பதவியை உருவாக்க போவதாக சொல்லவும், மிகுந்த ஆர்வம் எழுந்தது.
பொதுக்குழு: ஆனால், இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாத நிலையில், இப்போது, இதே பேச்சு மீண்டும் தேமுதிகவில் வலம் வந்து கொண்டிருக்கிறதாம். 'செயல் தலைவர்' பதவியில் பிரேமலதாவும், மாநில இளைஞரணி செயலர் பதவியில் விஜய பிரபாகரனும் அலங்கரிக்க போவதாக தகவல் கசிந்துள்ளது.
வரும் டிசம்பர் மாத இறுதியில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை நடத்தவும் முடிவு செய்துள்ளார்களாம். எனவே, அதற்கு முன்பாகவே, கட்சி தலைமை அலுவலகத்தில் யாகம் நடத்திவிட்டு, இந்த புதிய பொறுப்புகளை இருவரும் ஏற்கலாம் என்கிறார்கள். இதுகுறித்தும் உறுதியான அறிவிப்பு வரவில்லை என்றாலும், விரைவில் தேர்தல் வருவதால், தேமுதிகவின் களப்பணிகள் வேகம் எடுத்துள்ளன.
கூட்டணி: ஆனால், யாருடன் கூட்டணி என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. கடந்த முறை போல, இந்தமுறை, தேமுதிகவை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நழுவவிட மாட்டார் என்கிறார்கள்.. அதேசமயம், பாஜகவின் ஆதரவுக்கரமும் எப்போதும் போலவே, தேமுதிகவுக்கு இருக்கவே செய்வதால், கூட்டணி சஸ்பென்ஸ் நீடித்தபடியே உள்ளது. எப்படிபார்த்தாலும், புதுப்பொலிவுடன் ஜரூராக ரெடியாகி கொண்டிருக்கிறது, விஜயகாந்த் அரும்பாடு பட்டு உருவாக்கின தேமுதிக..!!












Click it and Unblock the Notifications