சிங்கப்பூர், மலேசியாவில் பண மோசடி செய்த நபர்! அலேக்காக தூக்கி ஆணியில் தொங்கவிட்ட விஜயகாந்த்
சென்னை: வெளிநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஒரு நபர் பணமோசடி செய்த போது அவர் காட்டிய அதிரடியை இன்றும் நேரில் பார்த்தவர்கள் கூறி சிலாகிக்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சென்னை ராமாவரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு சளிக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பிறகு அவர் பூரண குணமாகியதால் வீட்டிற்கு அனுப்புவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த அவர் பொதுக் குழு செயற்குழுவில் கலந்து கொண்டார். அப்போதே அவரை பார்த்த அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் கண்ணீர் விட்டனர்.
இந்த நிலையில் அவர் மீண்டும் டிசம்பர் 26-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது இறப்பு திரையுலகினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவர் இறந்து 10 நாட்களை கடந்த நிலையிலும் அவர் குறித்த நினைவுகளை பல பிரபலங்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் எல்லாரும் சொல்வது விஜயகாந்தின் கொடை வள்ளல், அன்னதானம், உதவின்னா ஓடி வருவது போன்றவற்றைத்தான் சொல்லி வருகிறார்கள்.
அது போல் அவருடைய தைரியத்தையும் சொல்கிறார்கள், உண்மை, நியாயம் இருக்கும் இடத்தில்தான் பாரபட்சம் இன்றி கோபம் இருக்கும். அது விஜயகாந்திடம் நிறைய உண்டு. கோபம் என வந்துவிட்டால் அடிக்க பாயவும் தயங்க மாட்டார் விஜயகாந்த். ஒரு முறை யாரோ ஒரு பெண்ணின் நகையை பறித்துக் கொண்டு ஓடிய ஒரு திருடனை துரத்தி பிடித்து அந்த சங்கிலியை மீட்டுக் கொடுத்தார்.
அது போல் இன்னொரு விஷயத்தை தயாரிப்பாளர் சிவா கூறி வருகிறார். நடிகர் சங்கத்திற்கு தலைவரான விஜயகாந்த், நடிகர் சங்கத்தின் மீது இருந்த கடனை அடைக்க வேண்டும் என சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் திரை நட்சத்திரங்களை வைத்து கலைநிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நடந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் போய் விஜயகாந்த் பேசி சேர வேண்டிய பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணம் தர முடியாது என அந்த ஏற்பாட்டாளர் திமிராக பேசினார். இதனால் விஜயகாந்த் கடுப்பானார். உடனே சினிமா படத்தில் வருவது போல் அந்த நபரை விஜயகாந்த் தூக்கி சுவற்றில் இருந்த ஆணியில் மாட்டினார்.
இதை அவருடன் இருந்து பார்த்தவர்கள் எல்லாம் பார்த்து மிரண்டே விட்டனர். பின்னர்தான் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நடிகர் சங்கத்திற்கு சேர வேண்டிய பணத்தை கொடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்துதான் அந்த நபரை விஜயகாந்த் இறக்கிவிட்டாராம். விஜயகாந்த் எப்போதும் நியாயத்திற்காக மட்டுமே போராடுபவர் என புகழாரம் சூட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications