சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்! வேட்டியை மடித்து கட்டி மாஸ் காட்டிய விஜயகாந்த்
சென்னை: நடிகர் திலகத்தின் இறப்பு சம்பவத்தின் போது கட்டுக்கடங்காத கூட்டத்தை தனியொரு ஆளாக வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு கட்டுப்படுத்தினார் விஜயகாந்த் என்ற பிளாஷ்பேக் மூலம் அவர் எத்தனை தைரியமிக்கவர் என தெரிகிறது.
விஜயகாந்த் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நுரையீரல் அழற்சி காரணமாக இன்று காலை காலமானார். இந்த நிலையில் அவரை பற்றி நினைவலைகள் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் முன்னாள் எம்எல்ஏ வாகை சந்திரசேகர் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு ஒரு விழா எடுப்பதாக மேடையில் அறிவித்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது அதுகுறித்து அவரிடம் பேசிய போது, இந்த விழாவுக்கு யார் வரபோகிறார்கள் என்றே அவர் வெளிப்படையாக கேட்டார்.
அதற்கு நான் நாங்கள் இருக்கிறோம், விழாவை சிறப்பாக நடத்துகிறோம் என்றேன். பின்னர் இதுகுறித்து விஜயகாந்திடம் கூறினேன், அவர் உடனே சிறந்த தலைவர் அவருக்கு நிச்சயம் விழா எடுக்க வேண்டும் என்றார். இந்த விழாவை ஆரம்பித்து வைத்தது நானாக இருந்தாலும் சிறப்பாக நடத்தி கொடுத்தது விஜயகாந்த்தான்.

அந்த அளவுக்கு அவருக்கு கருணாநிதி மீது பற்று இருக்கிறது. யாராக இருந்தாலும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவார் விஜயகாந்த். அதனால்தான் அவர் மீது கட்சி சாராமல் அனைவரும் அன்பை பொழிகிறார்கள். ஒரு ஷூட்டிங் என்றால் விஜயகாந்த் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்குவார். அங்கு ரசிகர்களை கட்டுப்படுத்துவார். அவர் சொன்னால் ரசிகர்கள் கேட்பார்கள்.
அந்தளவுக்கு மக்களுக்கும் விஜிக்கும் இடையே ஒரு ஈர்ப்பு இருக்கிறது. மற்ற நடிகர்கள் ரசிகர்களிடம் கோபித்துக் கொண்டால், என்ன இது நாம் இவரை பார்க்க வந்திருக்கிறோம் , இவர் இப்படி கோபித்து கொள்கிறாரே என கேட்பார்கள். ஆனால் விஜயகாந்துக்கு மட்டும்தான் அந்த சக்தி இருக்கிறது. எப்படி கூட்டம் இருந்தாலும் ஒற்றை ஆளாக விஜயகாந்த் கட்டுப்படுத்திவிடுவார்.
செந்தூர பூவே ஷூட்டிங்கின் போது இரவில் ஏதோ ஷூட்டிங் எடுத்ததற்காக நடிகர் செந்திலுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது போலீஸார் எல்லாம் வந்தார்கள். ஆனால் விஜயகாந்த் ஒற்றையாக நின்று அந்த மக்களை கட்டுப்படுத்தினார். விஜயகாந்துக்கு கள்ளம் கபடம் தெரியாது, நேர்மையான மனிதர்.
அது போல் செவாலியே சிவாஜி கணேசன் காலமான போது அவரது இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்தும் நடந்தே சென்றார். அப்போது போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தை விஜயகாந்த் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ரசிகர்களை கட்டுப்படுத்தினார் என வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications