விஜயகாந்தின் வித்தியாசமான பழக்கம் தெரியுமா? பசுமையான நினைவுகளை கண்ணீருடன் அசை போட்ட ராதாரவி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் வித்தியாசமான ஒரு பழக்கம் இருக்கிறது. அது என்ன தெரியுமா?
மதுரையில் விஜயராஜ் அழகர்சாமியாக 1952-ஆம் ஆண்டு பிறந்தவர்தான் விஜயகாந்த். இவர் ரைஸ் மில் அதிபரின் மகனாக பிறந்தாலும் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவர். ரைஸ் மில்லில் அனைவருக்கும் உதவுவாராம்.

ஒரு முறை ரைஸ் மில்லில் வேலை செய்த தொழிலாளி தனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் தவித்தாராம். அப்போது விஜயகாந்திடம் வந்து சொன்னாராம். உடனே விஜயகாந்த் சற்றும் யோசிக்காமல் தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தாராம்.
அந்த சங்கிலி அவருடைய தந்தை, விஜயகாந்திற்கு ஆசையாக வாங்கிக் கொடுத்தாராம். வீட்டிற்கு சென்று சட்டையை கழற்றிய போது விஜயகாந்தின் அப்பா பார்த்துவிட்டாராம். உடனே கழுத்தில் இருந்த சங்கிலி எங்கே என கேட்டாராம். அதற்கு அவர் நடந்ததை சொல்லியுள்ளார். உடனே விஜயகாந்தை அவரது தந்தை அடித்தாராம்.
இதையடுத்து அப்போது முதல் விஜயகாந்த் வைராக்கியம் கொண்டாராம். இனி தான் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு உதவி செய்யவேண்டும். அப்பாவின் பணத்தை எடுக்கக்கூடாது என முடிவு செய்தாராம். அதன் பிறகு அப்பாவின் நிழலில் இருக்க விரும்பாமல் சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து பின்னர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்.
ஒரே ஆண்டில் 18 படங்களில் கூட நடித்தார். நியாயவாதி, குணவாளன், நல்ல மனவாளன், பண்புடையவர், நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். இப்படிப்பட்ட விஜயகாந்திற்கு ராதாரவி, எஸ் எஸ் சந்திரன், பாண்டியன், தியாகு, வாகை சந்திரசேகர் ஆகிய 5 பேரும் நண்பர்கள். விஜயகாந்த் இறப்பால் தியாகு, ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் உடைந்துள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து ராதாரவி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜிம்மா என்றுதான் நான் அழைப்பேன், அவர் என்னை டேய் ரவி என்பார். விஜயகாந்த் கள்ளம் கபடமற்றவர். அவர் கட்சி ஆரம்பித்த 2005 ஆம் ஆண்டு திமுக ஆட்சி இருந்தது. அப்போது அவர் திமுகவை எதிர்த்துதான் பேச முடியும். அப்படிப்பட்ட நிலையிலும் தான் கட்சி ஆரம்பிப்பதை முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் போய் கூறி ஆசி வாங்கினார்.
நான் விஜிம்மாவை திட்டினேன். அப்படிப்பட்ட சூது வாது தெரியாதவர். எங்கள் கையின் அடிப்பகுதியில் நறுக்கென கிள்ளுவார். உயிர் போகிறபடி வலிக்கும். அப்படி தோளில் கை போட்டால் உடும்பு பிடிப்பது போல் இருக்கும். மன தைரியம் கொண்டிருந்தார். இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications