விஜயகாந்த்: ஒரு மனுஷன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்.. உனக்காக இந்த நாடே அழுவுதப்பா!
சென்னை: ஒரு மனுஷன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்.. உனக்காக இந்த நாடே அழுவுதப்பா என்ற ரமணா படத்தின் இறுதி காட்சிகள் கேப்டன் விஜயகாந்திற்கு அப்படியே பொருத்தமாக உள்ளது. விஜயகாந்திற்காக தமிழ்நாடே கண்ணீர் சிந்துகிறது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது உடல் சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் வரை ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆம்புலன்ஸ் உடனே வந்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். சாலி கிராமத்தில் உடல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்திய போது, கதறி அழுதபடி வந்த பல தொண்டர்கள், ஒருமுறை பார்க்க அனுமதியுங்கள் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

விஜயகாந்த் மரண செய்தி காலையில் வந்ததில் இருந்தே ஏராளமானோர் சென்னை நோக்கி வரத்தொடங்கினர். இதனிடையே சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அப்போது விஜயகாந்தின் உடலை பார்த்த உடன் கட்சி தொண்டர்கள் 'கேப்டன்...கேப்டன்... கேப்டன்...' என விண்ணதிர முழங்கினார்கள். மேலும், தன்மான சிங்கமே...கருப்பு சிங்கமே... கருப்பு எம்.ஜி.ஆரே... என தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் பலர் நேரில் வந்து விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார். கோயம்பேடு மேம்பாலமே மொத்தமாக முடங்கியது. நெரிசல் மிகுந்த கோயம்பேட்டில் ஒரு கட்டத்திற்குமேல் அஞ்சலி செலுத்தவே முடியாத அளவிற்கு அலைகடலென மக்ககள் திரண்டு வந்துவிட்டார்கள்.

இதையடுத்து விஐபிக்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்த கோயம்பேடுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் உடலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்ல அரசு முடிவு செய்தது. அங்கு பொதுமக்கள், விஐபிக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து இன்று அதிகாலை விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் என பல்லாயிரம் பேர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் அவரது உடலை ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு சென்று அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தே.மு.தி.க. அலுவலகம் வந்தடையும் என்றும், இறுதிச்சடங்கு மாலை 4.45 மணியளவில் நடைபெற்று தே.மு.தி.க. தலைமை வளாகத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே ஒரு மனுஷன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்.. உனக்காக இந்த நாடே அழுவுதப்பா என்ற ரமணா படத்தின் இறுதி காட்சிகள் கேப்டன் விஜயகாந்திற்கு அப்படியே பொருத்தமாக உள்ளது. அந்த படத்தில் வரும் காட்சியில், " எவ்வளவு பெரிய விஷயம் பண்ணியிருக்க.. உன்னை இப்படி பார்க்க மனசுக்கு கஷ்டமாக இருக்கு.. ஒரு மனுசன் பிரியும் போது, அவன் தாய் அழுதா, அவன் நல்ல மகன்.. அவனுடைய பிள்ளைகள் அழுதால், அவன் ஒரு நல்ல தகப்பன், அவன் கூடப்பிறந்தவங்க அழுதால் அவன் நல்ல ஒரு சகோதரன், அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதால் அவன் ஒரு நல்ல தலைவன்.. உனக்காக இந்த நாடே அழுகுதப்பா.." என்று முடியும். இந்த வசனம் விஜயகாந்திற்கு அப்படியே பொருந்தியுள்ளது.
அதேபோல் சின்ன கவுண்டர் படத்தில் ஒரு பாடல் வரும், அந்த வானத்தை போல் மனம் படைத்த மன்னவனே.. அந்த பாடல் வரிகளும் விஜயகாந்திற்கு அப்படியே பொருந்தியுள்ளது. அந்த பாடல்களை போட்டு விஜயகாந்திற்காக சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications