இல்லத்தரசிகளின் மனங்களில் என்றும் வாழும் விஜயகாந்த்.. ஏன் தெரியுமா?
சென்னை: விஜயகாந்த் நடிகராக அரசியல் தலைவராக பலராலும் போற்றப்படும் தலைவராக இருக்கிறார். விருத்தாச்சலம் தொகுதியில் அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உடன் செய்த மகத்தான செயல் இன்றைக்கும் இல்லத்தரசிகளின் மனங்களில் நீங்காத நினைவாக உள்ளது.
விஜயகாந்த் மரணம் அவரது கட்சி தொண்டர்களை மட்டுமல்லாது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அலை அலையாக மக்கள் கூட்டம் திரண்டு வந்து கொண்டுள்ளது. அனைவரின் மனங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.

கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். தனது தொகுதியில் வசிக்கும் இல்லத்தரசிகளுக்கு செய்த நற்காரியம் இன்றைக்கும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஹரிஹரசுதன் தங்கவேலு என்ற முகநூல் பதிவர் தனது பக்கத்தில் கேப்டனின் மறைவு, கட்சி பேதமின்றி அனைவரையும் வருத்தக் காரணம், நடிகன், அரசியல்வாதி என்பது கடந்த பிறர் இன்னல் அறிந்து, அவர் வாழ்வை உயர்த்தும் குணம் கொண்ட நல்லதொரு தலைவன் என்பதுவுமே என்று குறிப்பிட்டு அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கணினியைப் பள்ளிகளுக்கு அறிமுகம் செய்த முதல் மாநிலம், தமிழகம். செய்த தலைவர் கருணாநிதி. 2002களில், நான் பனிரெண்டாம் வகுப்பில் கணினி ஆய்வகத்தில் செய்த பெயிண்ட், ஹெடிஎம்எல் சித்து வேலைகளையெல்லாம் வீட்டில் அம்மாவிடம் சொல்வேன்.

அதல்லாம் எங்க எனக்குத் தெரியும், நான் பாத்தது கூட இல்ல என்பதே அவர் பதிலாக இருக்கும். கேப்டன் எம்.எல்.ஏ வாகத் தேர்வானதும் செய்த ஒரு அரும் காரியம், வீட்டம்மாக்களுக்குக் கணினிப் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்தது.
கலைஞர் மாணவர்களுக்கு அறிமுகம் செய்த அடுத்தகட்டத் தொழில்நுட்பத்தை, ஐந்தே வருடங்களில் வயது பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்கும் கொண்டு வந்த ஒரு தலைவன், விஜயகாந்த் அவர்கள். ஊருக்கு உழைத்தவர் அவர், எப்போதும் மக்கள் மனங்களில் நல்லதொரு தலைவனாக வாழ்ந்திருப்பார் என்று தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹரிஹரசுதன் தங்கவேலு.












Click it and Unblock the Notifications