அதே கம்பீரத்துடன் விஜயகாந்தின் சிலை! கண்ணீர் விட்டு திடீரென மயங்கி விழுந்த மகன் சண்முகபாண்டியன்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று நடந்த அஞ்சலி செலுத்தும் விழா, சிலைத் திறப்பு விழாவின் போது அவருடைய மகன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மறைந்த தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் இறப்பிற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது.

இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை முதலே ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடப்படும். அது போல் அவருடைய பிறந்தநாளில் எம்ஜிஆர் ஜானகி காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளையும் உணவையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கி வந்தார்.
அந்த வகையில் இன்றைய தினமும் அவர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு காலை முதலே கட்சியினர் திரண்டு வண்ணமலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் அவருடைய ஆள் உயர சிலை திறக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க, விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் அந்த சிலையை தொட்டு பார்த்து பிரேமலதா கண்ணீர் விட்டார். அவருடன் அவரது மகன் இருவருமே கண்ணீர் விட்டு அழுதனர். பிறகு அவரது சிலைக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலாலும் ஏற்கெனவே தந்தையை நினைத்து கண் கலங்கியதாலும் சண்முகபாண்டியனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பாதுகாப்பாக அழைத்து காரில் உட்கார வைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விஜயகாந்தின் சிலை அழகாக சிரித்தபடியே இருந்தது தொண்டர்களை நெகிழச் செய்தது. ஆனாலும் முகத்தில் கம்பீரம் குறையவில்லை. தம்ஸ் அப் காட்டியபடி சிலை இருந்தது. இதையடுத்து விஜயகாந்தின் கனவுகளை நிறைவேற்றுவோம் என அனைவரும் உறுதிமொழியேற்றனர்.












Click it and Unblock the Notifications