பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்காதவர் ரஜினிகாந்த்... விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விமர்சனம்..!
சென்னை: உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக் கூறிய ரஜினிகாந்த் பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விமர்சித்துள்ளார்.
ரஜினிகாந்த் மீது தாம் மரியாதை வைத்திருப்பதால் அவரை பற்றி மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

விஜய பிரபாகரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரனுக்கு இன்று பிறந்தநாள். அதையொட்டி கோவில், சர்ச், என அனைத்து இடங்களுக்கும் சென்று காலையிலேயே வழிபட்டவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது ரஜினி குறித்து பேசிய அவர், பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்காதவர் ரஜினி என்றும் ரஜினி மீதுள்ள மரியாதை காரணமாக அவரைப் பற்றி மேற்கொண்டு பேச விரும்பவில்லை என்றார்.

புயல் போல்
அச்சத்தின் காரணமாகவே திமுக முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாகவும் அதுவும் தொடங்கிய வேகத்திலேயே முடிந்தும் விட்டதாகவும் கூறினார். புயல் எப்படி வந்துவிட்டுச் சென்றதோ அதேபோல் திமுக பிரச்சாரமும் தொடங்கிய கணமே முடிந்தும் விட்டதாக விமர்சித்தார்.

விளக்கம்
தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருப்பதாகவும், மூன்றாவது அணி உருவாகுமா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய காரணத்தினால் தான் மூன்றாவது அணி குறித்து தாம் கருத்து தெரிவித்ததாக கூறினார். எத்தகைய தடைகளையும் கடக்கும் ஆற்றலும் வலிமையும் தேமுதிகவுக்கு உள்ளதாக தெரிவித்தார்.

நிர்வாகிகள் அழைப்பு
தேமுதிக நிர்வாகிகள் அழைத்ததன் பேரில் தான் கட்சிப் பணிகளை தாம் கவனித்து வருவதாகவும், அரசியலுக்கு வரமாட்டேன் என தனக்கு சீன் ஓட்டத்தெரியாது (அவர் கூறிய வார்த்தை)என்றும், விஜய பிரபாகரன் தெரிவித்தார். முன்னதாக பிராட்வே சகாயமாத பேராலயம் முன்பு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.












Click it and Unblock the Notifications