ஆம்புலன்ஸ்சில் வந்த விஜயகாந்த் உடல்.. அரை கம்பத்தில் பறக்கும் தேமுதிக கொடி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்து விட்டார். விஜயகாந்த் மறைவினை அடுத்து தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் ஏற்பட்டது.

உடல்நிலை பாதிக்கப்படவே வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அதில் இருந்து மீண்டார். அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜயகாந்த். கடந்த மாதம் 18ம் தேதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் பூரண குரணமடைந்தார்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் விஜயகாந்த். அவரது உடல்நிலையை பார்த்து தொண்டர்கள் கண்ணீர் விட்டனர்.
இந்நிலையில் தான் செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் அதிகரிக்கவே அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த் மறைவு செய்தி அவரது தொண்டர்களையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜயகாந்தின் உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. தேமுதிக அலுவலகங்களில் உள்ள கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications