மக்களுக்காக வாழ்ந்த விஜயகாந்துக்கு.. 24*7 மக்கள் நடமாட்டத்திற்கு மத்தியிலேயே சொந்த இடத்தில் கல்லறை!
சென்னை: மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த விஜயகாந்துக்கு 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமிக்க பகுதியிலேயே நினைவிடம் அமையவிருப்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் மறைந்தும் மக்களை விட்டு விஜயகாந்த் பிரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் கடினமான முறையில் விஜயகாந்த் உழைத்து சேர்த்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட நிலத்திலேயே அவரது கல்லறையும் அமைவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. சென்னை மாநகரின் மிக முக்கிய பகுதியாக திகழும் கோயம்பேட்டை பொறுத்தவரை 365 நாட்களும் 24 மணி நேரம் மக்கள் நடமாட்டமிக்க ஒரு இடமாகும். நள்ளிரவு நேரத்திலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருவதும், புறப்படுவதுமாக தான் உள்ளது.

இதனால் மக்களுக்கு மத்தியிலேயே மீளா துயில் கொள்ளப் போகிறார் விஜயகாந்த். அவரது சமுதாய வழக்கப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளார். விஜயகாந்தி இறுதுச்சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் நாலா திசைகளில் இருந்தும் அவரது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் தலைநகர் சென்னையில் குவிந்துள்ளனர். அவர்களை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு விரைவில் அங்கு பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் கட்சி அலுவலக வளாகத்திற்குள் விஜயகாந்தி முழு உருவ வெண்கலச் சிலை ஒன்றும் நிறுவப்படும் எனத் தெரிகிறது. 15 நாட்களில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

''வாழ்ந்தான் வாழ்ந்தான் மக்களுக்காகவே வாழ்ந்தான்'' என்ற வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகளும், பேனர்களும் சென்னை தீவுத் திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வரையிலான சாலைகளில் ஒட்டப்பட்டுள்ளன. விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications