கழுத்தில் தேமுதிக துண்டு, விரலில் முரசு சின்ன மோதிரம்.. தலையில் மஞ்சள் நிற தலையணையில் விஜயகாந்த்
சென்னை: கழுத்தில் தேமுதிக கட்சி துண்டு, கையில் முரசு சின்ன மோதிரத்தை அணிந்து கண்ணாடி பேழையில் படுத்திருக்கிறார் விஜயகாந்த். லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியுள்ள நிலையில் அவர்களுடைய அழுகுரலை கேட்டதும் கேப்டன் என்னவென கேட்க மாட்டாரா என தொண்டர்கள் ஏங்கியுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை நிமோனியாவால் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவருக்கு கருப்பு கண்ணாடி அணிவிக்கப்பட்டு பட்டு வேட்டி சட்டை உடுத்தப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் சிறிது நேரம் அங்கு வைக்கப்பட்டு பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாலிகிராமம் வீட்டிலிருந்து கோயம்பேட்டுக்கு செல்ல 4 கி.மீ. இருந்த நிலையில் அந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆனது. மக்கள் வெள்ளத்தில் நீந்தி விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு கண்களில் கருப்பு கண்ணாடி, முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வேட்டி சட்டையில் கேப்டன் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் கட்சி துண்டும் இருந்தது. வழக்கமாக இந்த கெட்டப்பில்தான் விஜயகாந்த் கட்சி அலுவலகங்களுக்கு வருவதுண்டு. அதே போன்றுதான் இன்றும் அவருடைய உடல் கொண்டு வரப்பட்டது.
பின்னர் ப்ரீசர் பாக்ஸில் இருந்த ஸ்டீல் போன்ற தலையணையில் விஜயகாந்த் தலை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பாக்ஸை எடுத்துவிட்டு மஞ்சள் நிறத்தில் தலையணையை அவரது தலைக்கு வைத்தனர். அது போல் கையில் வாட்சும் அணிந்திருந்தார். அப்போது தொண்டர்களும் அவருடைய மனைவி, மகன்களும் கண்ணீர் வடித்தனர். அது போல் அவருடைய கையில் எப்போது அணிந்திருக்கும் தேமுதிக சின்னம் பதித்த மோதிரத்தையும் அவர் அணிந்துள்ளார்.
விஜயகாந்த் மறைவையொட்டி தேமுதிக கட்சி கொடி 15 நாட்களுக்கு அரைகம்பத்தில் பறக்கவிடப்படுகிறது. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விஜயகாந்த் இறப்பை தாள முடியாமல் ரசிகர்கள் கதறி அழுத வண்ணம் இருக்கிறார்கள். பிரேமலதாவும் கணவர் விஜயகாந்தை பார்த்தபடியே கலங்கி அழுகிறார்.
தேமுதிக மகளிர் அணியினரும் தொண்டர்களும் கடவுளுக்கு கண்ணில்லையா , எங்களை எடுத்துக் கொண்டு கேப்டனை கொடுங்களேன் என கதறுகிறார்கள். அவ்வப்போது வெளியே வரும் பிரேமலதா தொண்டர்களின் அன்புக்கு கை கூப்பி நன்றி தெரிவிக்கிறார். அப்போது கலங்கி உடைந்து அழும் அவரை தாயை மகன்கள் தேற்றுகிறார்கள். மகன்கள் அழுதால் தாயும் தாய்மாமாவும் தேற்றுகிறார்கள். இப்படியாக அங்கு காணும் காட்சிகள் எல்லாம் நெஞ்சை கலங்கடிக்கின்றவையாகவே இருக்கின்றன.












Click it and Unblock the Notifications