விஜய்யின் பவுன்சர் கையில் இருக்கும் ‘சூட்கேஸ்’.. என்ன அது? இதுதான் விஷயம்!
சென்னை: விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது பாதுகாப்புக்காக உடன் இருக்கும் பவுன்சர்கள் கையில், கருப்பு நிற சூட்கேஸ் வைத்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.
பொதுவாக உலக தலைவர்கள், முதலமைச்சர்கள் போன்ற முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரிகளின் கைகளில் இதுபோன்ற சூட்கேஸை பார்க்க முடியும். அதேபோலதான் விஜய்யின் பவுன்சர்களும் சூட்கேஸை வைத்திருக்கின்றனர்.

இந்த சூட்கேஸ் பார்ப்பதற்கு லேப்டாப் பேக் மாதிரி தெரியும். விஜய் உடன் இருக்கும் பவுன்சர்கள், விஜய்யின் லேப்டாப்பை தான் பையில் வைத்து எடுத்து வருகிறார்களோ என்பது போன்று தெரியும். ஆனால் இது ஒரு 'புல்லட் புரூப் பேக்'. இதை 'Ballistic Shield Bag' என்றும் சொல்வார்கள். இதில் ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால், சட்டென கீழ்நோக்கி விரிந்து ஒரு முழு உடலை பாதுகாக்கும் அளவுக்கான கேடயமாக மாறிவிடும்.
சில பேக், ஒரு குறிப்பிட்ட முனையை பிடித்து உதறினால் விரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது பார்ப்பதற்கு துணி போல தெரிந்தாலும், இது துணியால் ஆனது கிடையாது.
இதனுள் கெல்வர் எனப்படும் சின்தடிக் பைபர் இழைகள் இருக்கும். இது இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையானது, ஆனால் எடை குறைவானது. அதேபோல UHMWPE எனும் நவீன புல்லட் புரூப் ஜாக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை பிளாஸ்டிக் இழை இருக்கும். இவை ஏவுகணை துண்டுகள் மற்றும் கை துப்பாக்கி தோட்டாக்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கும்.
இது 9mm பிஸ்டல்கள் மற்றும் .44 மேக்னம் போன்ற சக்திவாய்ந்த துப்பாக்கித் தோட்டாக்களைக் கூடத் தடுத்து நிறுத்தும். சில நவீன பேக்குகள் AK-47 போன்ற ரைபிள் தோட்டாக்களைத் தடுக்கும் அளவுக்கு வலிமையான பீங்கான் தகடுகளையும் உள்ளே கொண்டிருக்கும்.
பொதுவாக துப்பாக்கி குண்டுகளை தடுக்க, நவீன கேடயங்கள் இருக்கின்றன. ஆனால், அதை பொதுவெளியில் கொண்டு வந்தால் மக்கள் அச்சமடைவார்கள். எனவேதான், இந்த பேக் போன்ற கேடயம் பயன்படுத்தப்படுகிறது. விஜய்யின் பாதுகாப்புக்காக இது பயன்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications